ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் காரணமாக 2,17,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் வீடுகளில் முடங்கியுள்ளனர். ஒலிம்பிக் தொடர் உள்ளிட்ட அனைத்து போட்டிகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு
கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பானின் டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து விளையாட்டு வீரர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் இந்த நெருக்கடியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் பிரதமர் திட்டவட்டம்
இந்நிலையில் அடுத்த ஆண்டிற்குள் கொரோனா வைரஸ் கட்டுப்படவில்லை என்றால் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது கடினம் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்தபின்பே ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் 2020 தலைவர் கருத்து
அடுத்த ஆண்டிற்குள் கொரோனா வைரஸ் கட்டுப்படவில்லை என்றால் போட்டிகளை ரத்து தான் செய்ய வேண்டும் என்று டோக்கியோ ஒலிம்பிக் 2020ன் தலைவர் யோசிரோ மோரி தெரிவித்துள்ள நிலையில், தற்போது ஷின்சோ அபேவும் அதே கருத்தை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே ஒரு ஆண்டிற்கு ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.