புதிய சாதனை
ஒலிம்பிக் தொடரில் இந்தியா கடந்த 1920ம் ஆண்டு முதல் பங்கேற்று வருகிறது. பல்வேறு போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை வென்று வந்தாலும், தடகளப்போட்டியில் மட்டும் இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை. இந்நிலையில் பதக்கத்திற்காக 100 ஆண்டுகளாக காத்திருந்த இந்தியாவின் ஏக்கத்தை நீரஜ் சோப்ரா போக்கினார்.
பரிசு மழை
இதனையடுத்து நீரஜ் சோப்ராவுக்கு பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன. பிசிசிஐ நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவித்தது. அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சார்பாக, நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்தது. மேலும், நீரஜ் சோப்ராவின் சிறப்பான சாதனையைப் பாராட்டும் சிஎஸ்கே, 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 8758 என்ற எண் கொண்ட ஒரு சிறப்பு ஜெர்சியை சிஎஸ்கே உருவாக்கவிருக்கிறது.
ரகசியம்
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றை நீரஜ் சோப்ரா பகிர்ந்துள்ளார். அதாவது இறுதிப்போட்டியின் போது, நீரஜ் சோப்ராவின் ஈட்டியை பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் தீவிர தேடுதலுக்கு பிறகு அதனை கண்டறிந்து, வீசி தங்கம் வென்றுள்ளார் அவர்.
சுவாரஸ்ய நிகழ்வு
இதுகுறித்து பேசுகையில், இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நான் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது நான் பயன்படுத்தவிருந்த ஈட்டி திடீரென்று காணாமல் போனது. நீண்ட நேரமாக தேடியும் கிடைக்காத சூழலில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் எனது ஈட்டியை எடுத்துக்கொண்டு சென்றதை பார்த்தேன். உடனடியாக அவரிடம் சென்று, சகோதரரே அதனை என்னிடம் கொடுத்துவிடுங்கள், அதனை வைத்து தான் நான் விளையாட வேண்டும் எனக்கேட்டு வாங்கினேன். இதன் காரணமாக தான் முதல் சுற்றுப்போட்டியில் நான் சற்று பதற்றமாக இருந்தேன்.
வாழ்த்து
அர்ஷத் நதீம் தகுதிச்சுற்றுப் போட்டியிலும் சரி, இறுதிப்போட்டியிலும் சரி, மிகச்சிறப்பாக விளையாடினார். இது பாகிஸ்தானுக்கு மிகச்சிறந்த தருணம் ஆகும். ஏனென்றால் அந்நாட்டிலும் ஈட்டி எறிதலில் பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டு சர்வதேச அளவில் அந்த ஆசைகள் நிறைவேறும் எனத்தெரிவித்துள்ளார்.
இடைவெளியே இல்லை
டோக்கியோவில் இருந்து திரும்பியதில் இருந்து நீரஜ் சோப்ரா, தொடர்ந்து விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இதனால் அவரின் பயிற்சி பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். நான் தினமும் நிகழ்ச்சிகளுக்கு சென்று நன்கு வியர்வைகளை சிந்திவிட்டு, மீண்டும் காரில் ஏசி போட்டு உட்காருவது வழக்கமாகி விட்டது எனக்கூறினார்.