ஒலிம்பிக்
25 வயதாகும் பிரவீன் ஜாதவ், சர்வதேச வில்வித்தை போட்டிகளில் தொடர் வெற்றிகளை தன்வசம் ஆக்கி வந்தவர். இவர் 2019-ம் ஆண்டில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ஆண்கள் அணியிலும் இடம்பெற்றிருந்தவர் ஆவார். இவரின் தொடர் வெற்றிகளின் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்வதற்கான நுழைவுச்சீட்டு இவருக்கு கிடைத்தது.
அசத்தல் ஆட்டம்
கலப்பு பிரிவில் தீபிகா குமாரியுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய பிரவீன் ஜாதவ், காலிறுதிப்போட்டி வரை முன்னேறினர். ஆனால் அதில் கொரிய அணியிடம் போராடி தோல்வியடைந்தனர். இதே போல ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தையை சுற்றில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் தோல்வியடைந்தார். அமெரிக்க வீரர் எல்லிசனிடம் 6-0 என்ற கணக்கில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் தோல்வியடைந்தார்.
பஞ்சம்
முதல் ஒலிம்பிக்கை முடித்துவிட்டு நாடு திரும்ப காத்திருந்த பிரவீன் ஜாதவுக்கு அவரின் பெற்றோரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பிரவீனின் பெற்றோரை சிலர் தொந்தரவு செய்து வருவதாகவும், மிரட்டல்களை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1996 ஜூலை 6, மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தின் சரடே கிராமத்தில் பிறந்தவர் பிரவீன் ஜாதவ். மிகவும் பஞ்சம் மிகுந்த அக்கிராமத்தில் மிகச் சிறிய குடிசை வீட்டிலேயே வாழ்ந்துவந்தது அவரது குடும்பம். பெற்றோர் இருவரும் தினக்கூலிகள். வயலில் வேலைசெய்யும் தன் தந்தைக்கு, பிரவீன் சிறு வயதிலேயே உதவி செய்து வந்துள்ளார்.
பிரச்னையின் விவரம்
இந்நிலையில் தற்போது அந்த குடிசை வீட்டினை மாடி வீடாக கட்டும் பணிகளில் ஜாதவ் ஈடுபட்டுள்ளார். ஆனால் அதற்கு அக்கம்பக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரவீன் வீடு கட்டும் இடத்தில் சிறிது இடத்தை சொந்தம் கொண்டாடுவதாக தெரிகிறது. இதுகுறித்து வருத்தத்துடன் பேசியுள்ள பிரவீன் ஜாதவ், 6க்கும் மேற்பட்ட நபர்கள், எனது தாய், தந்தை, சகோதரிகளை மிரட்டி வருகின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே கொடுக்க வேண்டிய இடத்தை ஒதுக்கிவிட்டு பிரச்னை முடிந்திருந்தது. ஆனால் தற்போது வேண்டுமென்றே மீண்டும் பிரச்னை செய்கின்றனர். பெற்றோரை நிம்மதியாக வாழவிடுவதில்லை. அந்த இடம் எங்களின் பூர்வீக இடமாகும். தற்போது அங்கு வீடு கட்டுகிறோம் என பொறாமைப்படுகிறார்கள் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ராணுவம் நடவடிக்கை
பிரவீன் ஜாதவ் கடந்த 2017-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டார். 2019-ம் ஆண்டில் ஹவல்தாராக பணி உயர்வும் பெற்றார். வறுமையின் பிடியில் இருந்த அவருக்கு, ராணுவ பணி கிடைத்த பின்பு தான், தனது பெற்றோருக்கு காண்க்ரீட் வீடு கட்டித்தர வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். தற்போது அதற்கும் பிரச்னை வந்துள்ளது. தற்போது ஜப்பானில் உள்ள பிரவீன், ராணுவ உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து இந்திய ராணுவத்தின் உத்தரவுபடி, அந்த பகுதியின் காவல்துறையினர் விரைந்து சென்று பிரச்னை குறித்து விசாரித்து வருகின்றனர்.
காத்திருப்பு
ஒருபக்கம் ராணுவப்பணி மற்றொரு பக்கம் ஒலிம்பிக்கிற்கான பயிற்சி என ஓடிக்கொண்டிருந்தார் பிரவீன் ஜாதவ். அப்போது தான் வந்தது கொரோனா எனும் அச்சுறுத்தல். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விட்டதால், அவரால் வீட்டுக்கு வரவே முடியவில்லை. தான் பயிற்சிகாக சென்ற இடத்திலேயே தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். 2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு தான் பிரவீன் ஜாதவ் கடைசியாக வீட்டிற்கு சென்றார். அதன் பிறகு அதாவது 30 மாதங்களுக்கு பிறகு இந்த வருடம் மார்ச் மாதம் தான் தன் குடும்பத்தை மீண்டும் சந்தித்தார் பிரவீன்.
வேதனை
சிறுவயது முதலே வறுமையில் வாடிய பிரவீன் ஜாதவ், ஒலிம்பிக் போட்டி வரை சென்று அயல்நாட்டு வீரர்களுக்கு சவால் கொடுக்கும் படி விளையாடி வந்திருக்கிறார். அவர் ஆரவாரத்துடன் வரவேற்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாடு திரும்புவதற்கு முன்னரே இப்படி ஒரு கஷ்டம் வந்திருப்பது வேதனையின் உச்சமாக பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
ஒருபக்கம் பிரவீன் ஜாதவின் பிரச்னையை அரசாகம் தீர்த்துவைக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். மற்றொரு பக்கம், ஒலிம்பிக் வரை சென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பிரவீனுக்கு மத்திய, மாநில அரசுகள் வீடு கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகிறது. எது எப்படியோ பெற்றோருக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்ற அவரின் ஆசை விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.