குத்துச்சண்டை போட்டி
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஃப்ரெஞ்ச் நாட்டை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் மௌரத் ஆலீவுக்கும் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஃப்ரேசர் க்ளார்க்-கும் இடையே ஹெவி வெயிட்டர் குத்துச்சண்டையில் காலிறுதிப்போட்டி நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டி முடிவடைவதற்கு 4 விநாடிகள் இருப்பதற்கு முன்னதாகவே திடீரென நிறுத்தப்பட்டது. மேலும் ஃப்ரெஞ்ச் வீரர் மௌரத் ஆலீவ் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, தோல்வியடைந்தவர் என அறிவிக்கப்பட்டது.
திடீர் அறிவிப்பு
போட்டியின் இரு சுற்றுகளிலும், மௌரத் மற்றும் ஃப்ரேசர் ஆகியோர் மிகவும் சவால்கொடுத்து ஆடி வந்தனர். ஆனால் ஃப்ரேசர் பஞ்ச்-களை கொடுக்கும் போது மௌரத் வேண்டுமென்றே தனது தலையில் அடியை வாங்கிக்கொண்டு ஃப்ரேசரை தகுதி நீக்கம் செய்ய முயற்சிப்பதாக கூறிய, நடுவர் ஆண்டி மஸ்டாசியோ மௌரத்தை தகுதி நீக்கம் செய்து வெளியேற்றினார்.
நீண்ட நேர போராட்டம்
இதனால் கடும் அதிருப்தியடைந்த மௌரத் ஆலீவ், போட்டி முடிந்த பின்னரும், அங்கிருந்து செல்லாமல், ரிங்கின் மேலேயே உட்கார்ந்து போராட்டம் நடத்தினார். எனக்கு நடந்தது அநீதி என்பதை நிரூபிக்க என்னால் இதை தான் செய்ய முடியும். எனக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக போராடுவேன். உண்மையை சொல்லவேண்டும் என்றால், எனது அணி வீரர்கள் சிலருக்கும் அநீதி நடைபெற்றுள்ளது. இதுபோன்ற போட்டிக்காக தான் எனது வாழ்நாள் முழுவதும் பயிற்சி எடுத்து வந்தேன். ஆனால் அவை அனைத்தும் நடுவரின் தவறான முடிவில் தகர்ந்தது. எல்லாம் முடிந்தது எனக்கூறினார்.
எதிரணி வீரர் விளக்கம்
கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரை அங்கிருந்த அவரை, ஃப்ரெஞ்ச் அணி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து சென்றனர். ஆனால் மீண்டும் 15 நிமிடங்கள் கழித்து ரிங்கிற்கு அருகே வந்து அமர்ந்து எதிர்ப்பை பதிவு செய்து வந்தார். ஆனால் எதிரணி வீரர் ஃப்ரேசர் க்ளார்க் நடுவரின் முடிவை எற்றுக்கொண்டு பதக்கத்தை ஏந்தினார். இதுகுறித்து பேசிய அவர், 2 விதமான குழப்பங்கள் என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் வேண்டுமென்றே செய்திருக்கலாம், தெரியாமலும் செய்திருக்கலாம். ஆனால் அதனை என்னால் கூற முடியாது. நான் ஆலிவை பொறுமையாக இருக்க அறுவுறுத்தினேன். நிதானமாக உட்காந்து யோசித்து பார்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
புதிய சர்ச்சை
போட்டியின் போது வீரர் வேண்டுமென்றே தனது தலையினை இப்படி உள்நுழைத்தால், அவருக்கு நடுவர் முதலில் எச்சரிக்கை வழங்க வேண்டும்.ஆனால் மௌரத் ஆலிவ் விவகாரத்தில் நடுவர் எந்தவிதமான எச்சரிக்கையையும் வழங்கவில்லை. நேரடியாக தகுதி நீக்கம் முடிவுக்கு சென்றுவிட்டார் என குற்றம்சாட்டியுள்ளார். ஒலிம்பிக்கில் அநீதி நடைபெற்றிருப்பதாக கூறி வீரர் ஒருவர் போராட்டம் நடத்தியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.