டோக்கியோ: டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெறுவதாக உள்ள ஒலிம்பிக் போட்டிகளை ஒரு வருடத்திற்குத் தள்ளி வைத்துள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜப்பானில் இந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனாவைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கால்பந்து தொடர்கள், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் தள்ளிப் போடப்பட்டு விட்டது.
இந்த நிலையில் தற்போது ஜப்பானில் டோக்கியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியையும் தள்ளிப் போட கோரிக்கை வலுத்து வந்தது. இந்தப் பின்னணியில் ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடத்திற்குத் தள்ளிப் போடுமாறு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் பேச்சிடம் கோரிக்கை வைத்தார்.
இதுதொடர்பாக அவரும் பேச்சும் இன்று தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினர். அப்போது அபே வைத்த கோரிக்கையை ஏற்பதாக பேச் அறிவித்தார். தற்போதுள்ள நிலையில் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவது கடினம் என்று அபே கூறியிருந்தார்.
இதையடுத்து அடுத்த நான்கு வாரங்களில் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது போட்டிகள் ஒரு வருடத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக ஐஏசி அறிவித்திருப்பதாக ஏஎப்பி செய்தி தெரிவிக்கிறது. போட்டி தள்ளி வைக்கப்பட்டாலும் கூட டோக்கியோ 2020 என்ற ஒலிம்பிக் போட்டி அழைக்கப்படும் என்றும் ஐஓசி தெரிவித்துள்ளது.