அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு
டோக்கியோவில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரேனா வைரஸ் பாதிப்பு காரணமாக அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளன. போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கும் முடிவு அறிவிப்பு
ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் ஆகியோர் கலந்தாலோசித்து ரத்து செய்யும் முடிவை எடுத்தனர். ஏற்கனவே பாதிக்கும் மேற்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில்தான் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இல்லையெனில் ரத்து செய்யப்படும்
இந்நிலையில் அடுத்த ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லையெனில், அதை ரத்து தான் செய்ய வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரவில்லையென்றால் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டும் நடத்தப்படாது என்ற பிரதமர் ஷின்சோ அபேவின் கருத்துக்கு பதிலளிக்கையில் தாமஸ் பாக் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐஓசி தலைவர் அறிவிப்பு
கொரோனா வைரசிற்கு ஜப்பானில் 17,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 797 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஷின்சோ அபேவின் சூழலை தான் புரிந்துக் கொண்டுள்ளதாக பாக் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளை நிர்வகிப்பதற்கு எப்போது 3,000 முதல் 5,000 வரை ஊழியர்களை நியமித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீரர்களை காக்கவைக்க முடியாது
மேலும் ஒவ்வொரு வருடமும் விளையாட்டு திட்டங்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்க முடியாது என்றும் வீரர்களையும் காத்திருக்க வைக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறினார். போட்டிகளுக்கு முன்னதாக வீரர்களை தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தற்போது போடப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதி உலகத்தின் நிலைப்பாடு குறித்து அறிந்தவுடன் இறுதி திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.