3 பதக்கங்கள்
இந்திய பளு துக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, 49 கிலோ எடை பிரிவில் கலந்துக்கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம் இதுவே ஆகும். இவரை தொடர்ந்து கிட்டத்தட்ட ஒருவார காலம் இந்தியா எந்தவித பதக்கமும் இன்றி தொடர் ஏமாற்றங்களையே சந்தித்து வந்த வேளையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்று கொடுத்தார். சிந்து தங்கப்பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரையிறுதியில் தோல்வியடைந்துவிட்டார்.
தொடர் ஏமாற்றம்
சிந்துவை தொடர்ந்து யாரும் எதிர்பார்த்திராத ஆச்சரியம் இந்தியாவுக்கு கிடைத்தது. இளம் குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லினா அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று வியக்கவைத்தார். சமீபத்தில் நடைபெற்ற காலிறுதிப்போட்டியிலும் அவர் அபார வெற்றி பெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனால் வெண்கலப்பதக்கம் உறுதியாகியுள்ளது. இவருக்கான அரையிறுதிப்போட்டி நாளை நடைபெறவிருக்கிறது.
நீடிக்கும் நம்பிக்கை
இது ஒருபுறம் இருக்க இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குத்துச்சண்டை வீராங்கனை, வில்வித்தையில் தீபிகா குமாரி, அடானு தாஸ் உள்ளிட்டோர் பதக்கம் ஏதும் இன்றி ஏமாற்றம் கொடுத்துள்ளனர். முக்கிய வீரர்கள் அனைவரின் போட்டியும் முடிந்துவிட்டது என்றாலும், பதக்க நம்பிக்கை குறையவில்லை. பதக்கம் வென்று கொடுக்கக்கூடிய அளவிற்கான வீரர், வீராங்கனைகள் இன்னும் சிலர் உள்ளனர்.
மல்யுத்தம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் கண்டிப்பாக வெல்வார் என அடித்துக்கூறப்பட்ட வீரர்களில் மல்யுத்த வீரர்களில் பஜ்ரங் புனியாவும் ஒருவர். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் மூன்று முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் இவரே ஆகும். இதுமட்டுமல்லாமல் சர்வதேச தொடர்கள் பலவற்றில் கலந்துக்கொண்டு பதக்கங்களை குவித்தவர். இந்த ஒலிம்பிக்கில் இவர் 65 கிலோ எடைப்பிரிவில் கலந்துக்கொள்ளவுள்ளார். இவருக்கான போட்டி ஆகஸ்ட்.6ம் தேதி நடைபெறவிருக்கிறது.
வினேஷ்
இந்தியாவின் சார்பில் மிகுந்த நம்பிக்கை வைக்கப்பட்ட மற்றொரு மல்யுத்த வீரர் வினேஷ் போகட். கடந்த ரியோ ஒலிம்பிக்கின் போதே பதக்கம் வென்றிருக்க வேண்டியவர் வினேஷ். ஆனால் அப்போது காயம் ஏற்பட்டு வெளியேறினார். இந்நிலையில் தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவோடு வந்துள்ளார். இவருக்கான போட்டிகள் ஆக.5ம் தேதி தொடங்குகிறது.
நீரஜ்
ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக தற்போது பார்க்கப்படுவர் நீரஜ் சோப்ரா. இது அவர் கலந்துக்கொள்ளப் போகும் முதல் ஒலிம்பிக் தொடராகும். அவருக்கு முதல் அனுபவம் என்பதால் அதிக அழுத்தங்கள் இருந்தாலும், அவற்றை தாண்டி நிச்சயம் பதக்கம் வெல்வார் எனக்கூறப்படுகிறது. இவருக்கான போட்டிகள் நாளை முதல் நடைபெறவிருக்கிறது.
மகளிர் ஹாக்கி
டோக்கியோ ஒலிம்பிக்கின் தொடக்கத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்தது. இதனால் ஏதோ அதிர்ஷ்டத்தால் காலிறுதிக்கு முன்னேறியது எனக்கூறப்பட்டது. ஆனால் காலிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி வெளிப்படுத்திய ஆக்ரோஷ விளையாட்டு அவர்களின் பதக்க வெறியை காட்டியது. எனவே அடுத்து அர்ஜெண்டினாவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் மட்டும் வென்றுவிட்டால் வெள்ளிப்பதக்கம் உறுதியாகிவிடும். அரையிறுதிப்போட்டி நாளை நடைபெறவிருக்கிறது.
ஆடவர் ஹாக்கி அணி
டோக்கியோ ஒலிம்பிக்கில் மிகப்பெரும் நம்பிக்கையுடன் களமிறங்கிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி அடுத்தடுத்த வெற்றிகளால் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் இன்று நடைபெற்ற பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால், அடுத்ததாக வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடவுள்ளது. அதில் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாட் புட்
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று அசத்தியவர் டாஜிண்டர்பால் சிங். தற்போது ஃபுல் ஃபார்மில் இருக்கும் இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஏதாவது ஒரு பதக்கத்தை வென்றுவிடுவார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள். தற்போது வரை 3 பதக்கங்கள் உறுதியாகி உள்ள நிலையில், அது அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவருக்கான போட்டி இன்று நடைபெறவுள்ளது.