வீட்டிற்குள் முடங்கிய தடகள வீரர்கள்
சர்வதேச அளவில் பல விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். வீட்டிற்குள் தங்களது பிட்னெஸ் பயிற்சிகளை மட்டுமே அவர்களால் செய்ய முடிகிறது.
அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டோக்கியோவில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2020 அடுத்த ஆண்டு, அதே இடத்தில் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து சர்வதேச அளவில் தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வரும்நிலையில், சிலர், இந்த ஒத்திவைப்பு மூலம் தங்களுக்கு பயிற்சி செய்ய மேலும் கால அவகாசம் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்திய விளையாட்டு ஆணையம் நடவடிக்கை
இந்நிலையில், வீட்டில் முடங்கியுள்ள தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர்களுக்கு தேவையான பயிற்சி உபகரணங்களை வழங்க இந்திய விளையாட்டு ஆணையமான சாய் அமைப்பு முடிவு செய்து அவர்களிடம் விண்ணப்பங்களை பெற்று, உபகரணங்களை வழங்கி வருகிறது. இதனால் அவர்கள் தங்களது பயிற்சிகளை முழுமையாக இல்லாவிட்டாலும் ஒரளவிற்கு செய்ய முடியும்.
சாய் உறுதி
மத்திய விளையாட்டுத்துறை சார்பில் நாடு முழுவதும் பாரா ஒலிம்பிக் உள்ளிட்ட 107 தடகள வீரர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், முதல்கட்டமாக 43 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் பாதி வீரர்களுக்கு உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சாய் தெரிவித்துள்ளது.
வீரர்கள் மகிழ்ச்சி
முதல்கட்டமாக பஜ்ரங் புனியா, சுனில்குமார் போன்ற குத்துச்சண்டை வீரர்களுக்கும், மனு பாக்கர், சவுரவ் சவுத்ரி, சஞ்சீவ் ராஜ்புத் ஆகிய துப்பாக்கிசுடுதல் வீரர்களுக்கும் பயிற்சி உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சாய் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தங்களுக்கு பயிற்சி உபகரணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வீரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.