கராச்சி: கிரிக்கெட்டை அழிக்கும் வைரஸாக மாறியுள்ளது டுவென்டி 20. இதை நான் அன்றே சொன்னேன். இன்று அது நிரூபணமாகி வருகிறது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்தத்.இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகமானபோதே இது கிரிக்கெட்டை அழித்து விடும் என்று நான் எச்சரித்தேன். இன்று அது நிரூபணமாகி வருகிறது.உலகம் முழுவதும் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகள் வேகமாக பரவி வருகின்றன. பெருமளவில் பணம் புழங்க ஆரம்பித்துள்ளது. இதனால் நீண்ட நேர போட்டிகளான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு மவுசு குறையத் தொடங்கி விட்டது. வீரர்களும் அதிகளவில் பணம் கிடைக்கும் டுவென்டி 20 போட்டிகளி்ல் ஆடவே ஆர்வம் காட்டுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு வைரஸ் போலவே டுவென்டி 20 போட்டிகள் மாறி விட்டன. கிரிக்கெட்டை இது அழிக்க ஆரம்பித்துள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதில் தலையிட்டு டுவென்டி 20 போட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயலாவிட்டால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டை டுவென்டி 20 போட்டிகள் அழித்து இல்லாமல் செய்து விடும்.டுவென்டி 20 போட்டிகளால் நாடுகளுக்காக ஆடும் போக்கும் வீரர்களிடையே குறையத் தொடங்கி விட்டது. நாடா, பணமா என்ற கேள்வி வரும்போது பணம்தான் பிரதானம் என வீரர்கள் முடிவு செய்கிறார்கள். டுவென்டி 20 போட்டிகளில் புழங்கும் பெருமளவிலான பணமே இதற்குக் காரணம்.சில ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது அணிக்காக ஆடுவதிலிருந்து ஓய்வு பெற்று விட்டு டுவென்டி 20 போட்டிகளுக்குத் தாவி விட்டனர். இதுவே டுவென்டி 20 போட்டிகளின் அபாயகரமான பாதிப்புக்கு சிறந்த உதாரணமாகும்.டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் ஆடுவதை விட டுவென்டி 20 போட்டிகளில் ஆடவே வீரர்கள் பெருமளவில் விரும்புகிறார்கள். இதனால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் களையிழந்து போய்க் கொண்டிருக்கின்றன.ஐபிஎல் ஏலத்தில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதை பாகிஸ்தான் வீரர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அதை ஒரு பொருட்டாகவே அவர்கள் மதிக்கத் தேவையில்லை. தங்களது தேசியக் கடமையை உணர்ந்து பாகிஸ்தான் அணியின் வெறறியை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து ஆட வேண்டும்.உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருவது கவலையையும், வருத்தத்தையும் தருகிறது. ஒரு நாள் உலக கிரிக்கெட் விவகாரங்களை இந்தியாவே தலைமையேற்றும் நிலை வந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன்.இதை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் போன்ற நாடுகள் உணராவிட்டால், நிச்சயம் உலக கிரிக்கெட் இந்தியாவின் கைக்குப் போய் விடும் என்றார் மியான்தத்.ஐபிஎல் போட்டியை தடை செய்யவேண்டும்- நிதிஷ்:அதே போல கிரிக்கெட் வணிகமயமாவதை தடுக்க ஐபிஎல் போட்டிகளை தடை செய்யவேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமாரும் கூறியுள்ளார்.பாட்னாவில் நிருபர்களை சந்தித்த அவரிடம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த நிதிஷ், எனக்கு கிரிக்கெட்டை விமர்சிக்கும் அளவுக்கு அதைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் கிரிக்கெட் வீரர்களை ஏலம் விடுவது சரியல்ல என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு தேசிய உணர்வோடு ஒன்றிப்போன விஷயமாகிவிட்டது. இந்திய கிரிக்கெட் வீரர்களை மக்கள் மதிப்புக்கும், பாசத்துக்கும் உரியவர்களாக பார்க்கிறார்கள். இந்திய அணி மற்ற நாடுகளுடன் மோதும்போது நமது வீரர்கள், நமது நாடு வெற்றிபெற வேண்டும் என மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட வீரர்களை வெளிப்படையாக பணம் கொடுத்து வாங்குவதும், விற்பதும் நல்லதல்ல என்றே எனக்கு தோன்றுகிறது. மேலும், ஐபிஎல் போட்டிகள் வியாபாரத்துக்காக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் வணிகமயமாவதை தடுக்க ஐபிஎல் போட்டிகளை தடை செய்யவேண்டும் என்றார்.ஐபிஎல் துவக்க விழா மும்பைக்கு மாற்றம்:இந் நிலையில் ஐ.பி.எல் சீசன்-3 துவக்க விழாவும், முதல் போட்டியும் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளன.ஹைதராபாத்தில் நடைபெறுவதாக இருந்த இந்தப் போட்டிகள் தெலுங்கானா விவகாரத்தால் இடம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.