டெல்லி : 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில், சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
வரும் ஜூலை 28ம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் ஹோட்டலில் பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதில் 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் பங்கேற்கவுள்ளனர்.இந்த போட்டியில் தமிழக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ள வீரர் பிரக்ஞானந்தா தான். இந்தியாவின் 'பி' அணி சார்பாக களமிறங்கும் பிரக்ஞானந்தா சர்வதேச அளவில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறார்.
இந்திய அணி பயிற்சியாளராக இருந்தால்...? ராகுல் டிராவிட் இடத்திற்கு ஆப்பு.. குறி வைக்கும் பாண்டிங்
இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட்க்கு கவுரவம் அளிக்கும் விதமாக மத்திய அரசு தற்போது அதன் தபால் தலையை வெளியிட்டுள்ளது. இதில் வெள்ளை நிற வேட்டி, சட்டையில் குதிரை இருப்பது போன்ற லோகோ இந்த தபால் தலையில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சர் ஜெசிங்பாய் சவுகான், இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது மூலம் இந்தியர்களுக்கு கவுரவம் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
செஸ் இந்தியாவின் விளையாட்டு என்று குறிப்பிட்ட சவுஹான், இந்தியாவின் விளையாட்டு துறையை மாற்றி அமைக்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், செஸ் ஒலிம்பியாட்க்காக தபால் தலை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து கொண்டார்.