கட்டித் தழுவி வரவேற்றார்
டிரம்ப் இன்று காலை இந்தியா வந்தார். அவரை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டித் தழுவி வரவேற்றார். பின்னர் இருவரும் குஜராத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்றனர். அங்கே காந்தியின் சிந்தனைகள் குறித்து விளக்கினார் மோடி.
கிரிக்கெட் மைதானம்
பின்னர் இருவரும் பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ, சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்துக்கு வந்தனர். அங்கே நமஸ்தே டிரம்ப் என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டிரம்ப் இந்தியர்கள் இடையே என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஹௌடி மோடி நிகழ்ச்சி
சில மாதங்கள் முன்பு அமெரிக்காவில் மோடி ஹௌடி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு ஈடாக தற்போது இந்தியாவில் நமஸ்தே டிரம்ப் என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார் அமெரிக்க அதிபர்.
1,10,000 இருக்கைகள்
குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தில் 1,10,000 இருக்கைகள் உள்ளன. மோடி - டிரம்ப் பங்கேற்கும் இரு நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு அத்தனை இருக்கைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நமஸ்தே டிரம்ப்
ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் உரை ஆற்றினர். முதலில் பேசிய மோடி, இந்தியா - அமெரிக்கா உறவைப் பற்றி பேசினார். நமஸ்தே என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியில் ஒருவரை உளப் பூர்வமாக வரவேற்க பயன்படுத்தும் வார்த்தை என்றார்.
கை தட்டல்களை அள்ளினார்
அடுத்து பேசிய டிரம்ப், இந்தியர்களுக்கு பிடித்த விஷயங்களை வைத்து பேசி, ஒவ்வொரு நிமிடத்திற்கும் கை தட்டல்களை அள்ளினார். அவரும் நமஸ்தே என்ற வார்த்தையை கூறியே தன் பேச்சை துவக்கினார். மோடி என் நண்பர் என குறிப்பிட்டு பேசினார்.
பிரம்மாண்ட வரவேற்புக்கு நன்றி
இந்தியா மீது மதிப்பு உள்ளது என கூறிய டிரம்ப், அந்த கிரிக்கெட் மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்த மக்களை குறிப்பிட்டு, இந்த பிரம்மாண்ட வரவேற்புக்கு நன்றி கூறினார். அமெரிக்காவின் இதயத்தில் இந்தியர்களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு என்றார்.
தேநீர் விற்றார் மோடி
அடுத்து மோடியை பற்றி புகழ்ந்து அங்கே இருந்த மக்களை கவர்ந்தார் டிரம்ப். மோடி தேநீர் விற்பதில் வாழ்க்கையை துவங்கி, இன்று தலைவராக உயர்ந்து, அனைத்து மக்களாலும் நேசிக்கப்படுகிறார் என்றார். அவரது காலத்தில், இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் மின்சார வசதி பெற்றுள்ளது என குறிப்பிட்டார்.
சச்சின், கோலி
அடுத்து இந்தியா வல்லரசாக மாறி உள்ளது பற்றி பேசிய டிரம்ப், அடுத்து வரிசையாக இந்திய பிரபலங்கள் பெயரை கூறி கைதட்டல்களை அள்ளினார். கிரிக்கெட்டில் உலக அளவில் புகழப்படும் நட்சத்திரங்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி பெயரை குறிப்பிட்டு பாராட்டினார் டிரம்ப்.
ஷாருக்கான் பற்றி பேச்சு
அடுத்து பாலிவுட் பற்றி பேசிய அவர் ஷாருக்கான் பெயரை குறிப்பிட்டார். அதற்கும் கை தட்டல்களை அள்ளினார். இந்தியா பற்றி சிறப்பாக பேசி, ஒவ்வொரு விஷயத்திலும் சிக்ஸர் அடித்தார் டிரம்ப். இந்த விழா முடிந்த பின் அவர் ஆக்ரா கிளம்பிச் சென்றார். அங்கே தாஜ் மகாலை அவர் பார்வையிட உள்ளார்.