லண்டன்: உலக தடகள போட்டியின் 100மீ ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் மூன்றாவது இடம் பிடித்து அதிர்ச்சியளித்தார். இந்தப்போட்டியில் ஜஸ்டின் கட்லினிடம் தங்கப்பதக்கத்தை பறிகொடுத்தார் உசைன் போல்ட்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் 16-வது உலக தடகள போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்றுவருகின்றன. இதில் மொத்தம் 24 போட்டிகள் இடம் பெற்றுள்ளன. உலகின் பிரபல ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் இந்தத் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக ஏற்க்கெனவே அறிவித்திருந்தார். அதனால் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.
100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான உசேன் போல்ட், ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். "உலக தடகளத்தில் 11 தங்கப் பதக்கங்களை அள்ளியிருக்கும் இவர், தோற்கடிக்கப்படாமல் விடைபெறுவேன்" எனவும் உசைன் போல்ட் போட்டிக்கு முன்னதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், மிக முக்கிய போட்டியான 100மீ ஓட்டப்பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில், அமெரிக்க வீரர் கட்லின் 100 மீட்டர் தூரத்தை 9.92 விநாடிகளிலும், அவரது சக வீரரான கிறிஸ்டியன் கோல்மேன் 9.94 விநாடிகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற போல்ட் 9.95 விநாடிகளில் மூன்றாம் இடத்திற்கு வந்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இறுதிப்போட்டியில் வெண்கலப்பதக்கம் மட்டுமே பெற்றிருந்தாலும், ரசிகர்கள் போல்ட்டுக்கு சிறப்பான மரியாதையுடன் பிரியாவிடை அளித்தனர்.