டெல்லி: சக வீரர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதையடுத்து ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரரான உலகின் மின்னல் வீரர் உசேன் போல்ட் தங்கப் பதக்கத்தை ஒலிம்பிக் கழகத்திடம் ஒப்படைத்தார்.
கடந்த 2008-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற 'பீஜிங் ஒலிம்பிக்' போட்டியில் ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் உசைன் போல்ட் தலைமையிலான ஜமைக்கா அணி தங்கம் வென்றது.
அந்த அணியில் இடம்பெற்றிருந்த கார்டர் என்ற வீரர் ஊக்கமருந்து உட்கொண்டதாக சோதனையில் உறுதியானது. இதையடுத்து ஜமைக்கா அணியின் வெற்றி செல்லாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. இதனால் அணியில் உள்ள நான்கு பேரும் பதக்கத்தை திருப்பியளிக்க வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டது. இதனடிப்படையில் முதன்முதலாக உசைன் போல்ட் தனது பதக்கத்தை திருப்பி அளித்துள்ளார்.
இதனால் 9 தங்கப் பதக்கங்களை தன் வசம் வைத்திருந்த உசேன் போல்டிடம் தற்போது தங்கப் பதக்க எண்ணிக்கை 8 ஆக குறைந்துள்ளது. பதக்கத்தை திருப்பியளித்த உசைன் போல்ட் கூறுகையில் ''எனது தங்கப் பதக்கங்களில் ஒன்றை திருப்பி அளித்தது கடினமாக இருந்தது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் பதக்கத்தை கொடுத்துவிட்டேன்.'' என்று கூறியுள்ளார்.