திருமணத்திற்கு பிறகு அதிக காதல்
கேப்டன் விராட் கோலி தன்னுடைய கிரிக்கெட் துறையில் அதிகமான சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறார். அவரது இந்த சாதனைகளுக்கு அவரது குடும்ப வாழ்க்கையை மிக முக்கிய காரணமாக சொல்லலாம். பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை ஒரு விளம்பர நிகழ்ச்சியில் சந்தித்த விராட் கோலி, காதலாகி கசிந்துருகினார். தற்போது வரை அது தொடர்கிறது.
2017ல் திருமணம்
விளம்பரத்தின்மூலம் தோன்றிய இவர்களின் நட்பு காதலாக, இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்தனர். இந்த உறவு நீடிக்காது என்ற அனைவரின் ஆரூடத்தையும் பொய்யாக்கி இந்த ஜோடி கடந்த 2017 டிசம்பரில் இத்தாலியில் கவிதையாக இணைந்தது. தற்போதுவரை இருவரும் தங்களின் சாதனை பயணங்களை தொடர்ந்து வருவதற்கு இவர்களின் இந்த காதல் வாழ்க்கையே காரணமாக உள்ளது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதும், இவர்களின் தொடர்ந்த காதலுக்கு காரணமாக உள்ளது.
காதலை சொன்ன அஞ்சலி
சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி மருத்துவர் அஞ்சலியும் காதல் திருமணம் புரிந்தவர்களே. இவர்களில் முதலில் ஏர்போர்ட்டில் சச்சினைக் கண்டு காதல் கணைகளால் பாதிக்கப்பட்டவர் அஞ்சலிதான். பிறகு அவருக்கு போன் செய்து துரத்தி துரத்தி காதலித்தவர், அவரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு நிருபர் வேடத்தில் சென்று மாட்டிக் கொண்டுள்ளார். இவர்களின் காதல்கதையின் ஹைக்கூவாக இரண்டு குழந்தைகள் இவர்களுக்கு உள்ளனர்.
|
சச்சின் டெண்டுல்கர் உருக்கம்
சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இவர் கிரிக்கெட்டை அந்த அளவிற்கு நேசிப்பதுதான். கிரிக்கெட் தான் சச்சினின் முதல் காதல் என்ற உண்மையை அஞ்சலியும் ஒரு பேட்டியின்போது ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் காதலர் தினத்தையொட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் சச்சினும் தன்னுடைய முதல் காதல் என்ற கேப்ஷனுடன் தான் கிரிக்கெட் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றையும் இன்று வெளியிட்டுள்ளார்.
பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்
பள்ளியில் ஒன்றாக படித்த தோனியும் சாக்ஷியும் அதன்பின்பு அவர் கிரிக்கெட்டராக மாறிய பின்புதான் சந்தித்துள்ளனர். கேட்டரிங் படித்துக் கொண்டிருந்த சாக்ஷி, கொல்கத்தாவின் ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்துக் கொண்டிருந்தார். ஈடன் கார்டனில் நடைபெற்ற போட்டி ஒன்றிற்காக அங்கு தங்கிய தோனியை சாக்ஷி சந்தித்து பேச... வேறென்ன பற்றியது காதல் தீ...
தினந்தோறும் கொண்டாட்டம்
கடந்த 2010ல் இவர்களின் காதல் திருமணம் கைகூட, தற்போதுவரை இவர்களின் காதல் தொடர்ந்துவருகிறது. இவர்களின் வாழ்க்கை கொண்டாட்டத்தின் பரிசாக குழந்தை ஜிவா இருக்கிறார். தோனி மற்றும் சாக்ஷியின் செல்ல சீண்டல்கள், சிணுங்கல்கள் போன்றவை தற்போதும் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் தவிர்க்க முடியாதவையாக உள்ளன.
|
நடுக்கடலில் காதலை உறுதிசெய்த ஜோடி
நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சுடனான தன்னுடைய காதலை இந்த ஆண்டின் புத்தாண்டு தினத்தில் உறுதி செய்தார் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா. புத்தாண்டு தினத்தில் நடுக்கடலில் படகில் மோதிரம் மாற்றிக் கொண்ட இந்த ஜோடி கேக் வெட்டியும் காதலை பகிர்ந்து கொண்டனர். புத்தாண்டில் இவர்களது காதல்தான் ஹாட் டாபிக்காகவும் பலருக்கு அதிர்ச்சி அளித்த விஷயமாகவும் இருந்தது.
புரபோஸ் செய்த அழகு
ரோகித் சர்மா தன்னுடைய காதலை பிரபோஸ் செய்த அழகிற்கே அவரை காதலிக்க தோன்றியதாக அவரது காதலியும் தற்போதைய மனைவியுமான ரித்திகா சச்தே தெரிவித்துள்ளார். தன்னை லாங் டிரைவ் கூட்டிப்போன ரோகித், தான் முதன்முதலாக கிரிக்கெட் பயிற்சி செய்த இடத்திற்கு அழைத்து சென்று தன்னுடைய காதலை தெரிவித்துள்ளார். அது தன்னுடைய வாழ்க்கையின் மிக அழகிய தருணம் என்று மெய்சிலிர்க்கிறார் ரித்திகா. இவர்களின் காதல் பயணத்தில் தான் அடித்த 208 ரன்களை தன்னுடைய திருமண நாளின் பரிசாக ரோகித் அறிவித்ததும் சிறப்பானது.
|
சிறப்பு அறிவுரை
இந்நிலையில் வாலண்டைன் நாளையொட்டி இன்று ரோகித் சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதல் மனைவியுடன் தான் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் நாளை என்ற ஒரு நாள் இல்லை என்ற நினைப்பில் உங்களுடைய பிரியத்திற்குரியவர்களை நேசியுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் மருமகள்
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இருவரும் காதலித்து கடந்த 2010ல் திருமணம் செய்து கொண்டனர். சானியாவை பாகிஸ்தான் மருமகள் என்றே அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர். இந்நிலையில் இவர்களது காதலுக்கு பரிசாக கடந்த 2018ல் ஆண் குழந்தை பிறந்துள்ளது. காதல் தந்த ஊக்கத்தில் தற்போது இவர் மீண்டும் சர்வதேச டென்னிஸ் களத்தில் குதித்துள்ளார்.
10 ஆண்டு காதல்கதை
பிரபல பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் சக வீரரான காஷ்யப் இருவரும் கடந்த 2008 முதல் ஒன்றாக பயிற்சி மேற்கொண்டு ஒன்றாக ஆடத்துவங்கினர். இதையடுத்து இருவருக்குள் ஏற்பட்ட நட்பு காதலாகியது. கடந்த 2018ல் இவர்களுக்குள் திருமணம் நடைபெற்றது. ஒரே துறையை சேர்ந்த இருவர் காதலர்களாகவும் தொடர்ந்து தம்பதிகளாகவும் இருப்பதில் சிரமம் அதிகமாக இருக்கும். இதைமீறி தங்களது காதல் பயணத்தை தொடர்ந்து வருகிறது இந்த ஜோடி.
அதிகமான காதல்கள்
உலக அளவில் காதல் திருமணங்கள் அதிகரித்துள்ளது மிகவும் வரவேற்க தக்கதுதான். ஆயினும் சரியான புரிதலே காதலை அதை தொடர்ந்து திருமண வாழ்க்கையை கொண்டாட்டமாக்கும். காதல் இல்லாத மனிதரும் இல்லாத இடமும் இல்லை. சர்வதேச அளவில் பல விளையாட்டு வீரர்களின் காதல்கள் உள்ள போதிலும் நம்நாட்டு வீரர்களின் காதல் கதையை சொல்வதற்கே கட்டுரை இந்த அளவிற்கு நீண்டுவிட்டது. இதிலும் விடுபட்டவர்கள் இன்னும் ஏராளம். நேரம் கருதி இத்துடன் விளையாட்டு காதல்களை முடித்துக் கொள்கிறோம்.