டெல்லி : இந்தியாவின் பெயரை குத்துச்சண்டை அரங்கில் உயரச் செய்தவர்களில் விஜேந்தர் சிங் முக்கியமான வீரர்.
மேரி கோம் மகளிர் குத்துச்சண்டையில் கோலோச்சி வரும் நிலையில், விஜேந்தர் சிங் நாட்டுக்காக அமெச்சூர் போட்டிகளிலும், பின்னர் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளிலும் தன் முத்திரையை பதித்தார்.
2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் விஜேந்தர் சிங் வெண்கலம் வென்றார். அந்த தருணம் தான் இந்தியாவில் குத்துச்சண்டை குறித்து பலரும் அறிந்து கொள்ள முக்கிய காரணமாக இருந்தது. பல இளைஞர்கள் குத்துச்சண்டையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் பயிற்சி செய்யத் துவங்கினர்.
தொடர்ந்து 2009 உலக சாம்பியன்ஷிப், 2010 காமன்வெல்த் தொடர்களில் வெண்கலம் வென்றார் விஜேந்தர் சிங். 2006 மற்றும் 2014 காமன்வெல்த் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
100 சதங்கள்... 34,357 ரன்கள்.. சாதனை நாயகனின் சாதனை பட்டியல்
அமெச்சூர் குத்துச்சண்டை போட்டிகளில் ஆடி நாட்டுக்காக பதக்கங்கள் பெற்றுக் கொடுத்த அவர் 2015இல் தொழில்முறை குத்துச்சண்டை வீரராக மாறினார். அதனால், அவர் இனி நாட்டுக்காக குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பதால் அது சர்ச்சை ஆனாலும், தொழில்முறை அரங்கில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் சாதனை புரிந்து வருகிறார்.
2015இல் இருந்து 2019வரை 12 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். அதில் எட்டு வெற்றிகள் நாக் - அவுட் முறையில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
விஜேந்தர் சிங்கிற்கு 2009இல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அளித்து கௌரவப்படுத்தியது மத்திய அரசு. 2010இல் அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் அளிக்கப்பட்டது.