டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்றாவது முறையாக பட்டம் வென்று புதிய சாதனையைப் படைக்க காத்திருக்கிறார் குத்துச் சண்டை வீரர் விகாஸ் கிருஷண்.
18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் 18ம் தேதி துவங்குகிறது. இதில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளவர்களில் ஒருவராக குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷண் உள்ளார்.
இந்த முறையும் பதக்கம் வென்றால், தொடர்ந்து மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
2010ல் தங்கம் வென்ற கிருஷண், 2014ல் வெண்கலம் வென்றார். 2010ல் லைட்வெயிட் பிரிவில் பங்கேற்ற அவர், 2014ல் மிடில்வெயிட் பிடிவில் பங்கேற்றார். தற்போதும் மிடில் வெயிட் பிரிவில் பங்கேற்க உள்ளார்.
குத்துச்சண்டை வீரர் ஹவா சிங், 1966 மற்றும் 1970ல் ஹெவிவெயிட் பிரிவில் தங்கம் வென்றார். தொடர்ந்து இரண்டு தங்கம் வென்ற அவருடைய சாதனை இன்றும் தொடர்கிறது. மிடில்வெயிட் பிரிவில் விஜேந்தர் சிங், 2006ல் வெண்கலம் வென்றார். 2010ல் தங்கம் வென்றார்.
2011ல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற கிருஷண், இந்தாண்டு பல்கேரியாவில் நடந்த ஸ்டார்ன்ஜா கோப்பை போட்டியில் தங்கம் வென்றார். அதைத் தொடர்ந்து காமன்வெல்த் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றார்.
தற்போது முழு உடல்தகுதியுடன் உள்ள விகாஸ் கிருஷண், தொழில்முறை குத்துச்சண்டை வீரராகும் திட்டத்தில் உள்ளார். தற்போதைக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வதுதான் என்னுடைய இலக்கு. மற்றவை குறித்து யோசிக்கவில்லை என்று கூறுகிறார்.