இரட்டை ஆதாயம்
பிசிசிஐ விதிகளில் கடந்த ஆண்டு முதல் பல விதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக பிசிசிஐ அதிகாரிகள், வீரர்கள் உட்பட யாரும் ஒரே நேரத்தில் ஆதாயம் பெறும் வகையில் வெவ்வேறு பணிகளில் ஈடுபடக் கூடாது. அப்படி இரட்டை ஆதாயம் பெற்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விதியில் இடம் உள்ளது.
சஞ்சீவ் குப்தா புகார்
இந்த நிலையில் மத்திய பிரதேச கிரிக்கெட் அமைப்பின் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா என்பவர் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மீது இரட்டை ஆதாயம் பெறுவதாக பரபரப்பு புகார் ஒன்றை கூறி உள்ளார். கோலி இயக்குனராக இருக்கும் இரண்டு நிறுவனங்கள் குறித்து அவர் தன் புகாரில் கூறி உள்ளார்.
இயக்குனராக இருக்கும் கோலி
விராட் கோலி ஸ்போர்ட்ஸ் எல்எல்பி கம்பெனியின் இரண்டு இயக்குனர்கள் - விராட் கோலி, அமித் அருண் சஜ்தே. கார்னர்ஸ்டோன் வென்சர் பார்ட்னர்ஸ் எல்எல்பி கம்பெனியின் இயக்குனர்கள் - விராட் கோலி, அமித் அருண் சஜ்தே மற்றும் பினோய் பரத் கிம்ஜி.
மற்ற வீரர்களின் ஒப்பந்தம்
இதில் அமித் அருண் சஜ்தே மற்றும் பினோய் பரத் கிம்ஜி கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட் அன்ட் எண்டர்டெயின்மென்ட் என்ற கம்பெனியின் இயக்குனர்களாக உள்ளனர். அந்த கம்பெனி பிற இந்திய அணி வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது.
சிக்கல்
விராட் கோலியின் வியாபார பங்குதாரர்கள், கோலி கேப்டனாக இருக்கும் இந்திய அணியின் வீரர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால், கேப்டன் விராட் கோலி இதில் இரட்டை ஆதாயம் பெற வழி உள்ளதாக சிக்கலான புகாரை அளித்துள்ளார் சஞ்சீவ் குப்தா.
புகாரை விசாரிக்கும் பிசிசிஐ
இந்த புகாரை விசாரணை அதிகாரி டிகே ஜெயின் ஆய்வு செய்து வருகிறார். அவரது முடிவு, பிசிசிஐயில் சுதந்திரமானது என்பதால் அவர் இந்த புகாரை விசாரிக்க முடிவு செய்தால் யாரும் தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிக்கு நோட்டீஸ்
சஞ்சீவ் குப்தா அளித்துள்ள புகாரில் முகாந்திரம் இருப்பதாக டிகே ஜெயின் கருதினால் விராட் கோலிக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்படும். இதற்கு முன் எந்த இந்திய கேப்டனும் இப்படி ஒரு புகாரில் சிக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் அதிர்ச்சி
கேப்டன் விராட் கோலி மீதே புகார் எழுந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தீவிரமான புகார் இல்லை என்றாலும், கோலியின் தீவிர ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜாம்பவான்கள் மீது புகார்
இதே சஞ்சீவ் குப்தா முன்பு சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்ஷ்மன், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே என பல்வேறு ஜாம்பவான்கள் மீதும் புகார் எழுப்பி இருந்தார். அதன் காரணமாக சிலர் தங்கள் பிசிசிஐ பதவிகளை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.