சென்னை: 44வது சென்னை செஸ் ஒலிம்பியாட் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் இந்தியா சார்பாக 6 அணிகள் பங்கேற்றது.
இதில் ஓபன் பிரிவில் இந்திய பி அணி வெண்கலமும், மகளிர் பிரிவில் இந்திய ஏ அணியும் வெண்கலப் பதக்கம் வென்றது.
இதில், இந்திய அணிக்கு மெண்ட்ராக 5 மறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் செயல்பட்டார்.
மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசுடன் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்த உதவினார். சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் மூலம், செஸ் விளையாட்டு இளம் சிறுவர்களிடையே மேலும் பிரபலம் அடையும் என்று விஸ்வநாதன் ஆனந்த் கூறினார்.
இதே போன்று பெரும்பாலான 90 ஸ் கிட்ஸ்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் மூலம் தான் செஸ் விளையாட்டு பிரபலம் அடைந்தது. பலருக்கும் மிகவும் பிடித்த வீரர் என்றால் அது ஆனந்த் தான். இந்த நிலையில், விஸ்வநாதன் ஆனந்த் மகன் அகில் ஆனந்த் அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
இதில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண வந்த அகில் ஆனந்திடம், தொகுப்பாளர் உங்களுக்கு உலகத்திலேயே மிகவும் பிடித்த வீரர் யார் என்று கேட்டார். ஆனால், அவர் எனக்கு பிரக்ஞானந்தா தான் மிகவும் பிடிக்கும் என்று பதில் அளித்தார். இதனால் ஆச்சரியம் அடைந்த தொகுப்பாளர், நீங்கள் உங்கள் தந்தையின் பெயரை சொல்வீர்கள் என நினைத்தேன் என்று கூறினார். தற்போது இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பிரக்ஞானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.