டெல்லி : இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர், இந்தியாவில் இருந்து முதன் முதலில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமைகளுக்கு உரியவர் விஸ்வநாதன் ஆனந்த்.
இந்தியாவின் பெருமையை செஸ் விளையாட்டின் மூலம் பரப்பியவர். அவர் செஸ் உலகில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.
அவரது சாதனைகளை 90கள் முதலே கண்டு பல ஆயிரம் இளம் சிறுவர் - சிறுமியர் செஸ் விளையாட்டில் ஆர்வம் செலுத்தினர். அதன் காரணமாகவே இந்தியாவில் பல செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் உள்ளனர்.
1988இல் விஸ்வநாதன் ஆனந்த் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றார். இந்தியாவில் அதற்கு முன் யாரும் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றதில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடி பல்வேறு வெற்றிகளை குவித்த அவர் 2006இல் செஸ் விளையாட்டுக்கான எலோ ரேட்டிங்கில் 2800 புள்ளிகளை கடந்தார். வெகு சிலரே அதை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். செஸ் தரவரிசையில் தொடர்ந்து 21 மாதங்கள் முதல் இடத்தில் இருந்தார் ஆனந்த்.
ரேபிட் வகை செஸ் போட்டிகளில் தான் துவக்கம் முதலே அவருக்கு ஆர்வம் அதிகம். அந்த வரை செஸ் தொடர்களில் பல்வேறு பட்டங்களை வென்று குவித்துள்ளார். செஸ் சாம்பியன்ஷிப் தொடர்களை டோர்னமென்ட் முறையிலும், நாக்-அவுட் முறையிலும், ரேபிட் முறையிலும் வென்ற ஒரே வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே.
1991-92இல் இந்தியாவில் முதன் முறையாக சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. முதன்முதலாக அந்த உயரிய விருதை வென்ற விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தான். 2007இல் இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதையும் பெற்று இருக்கிறார்.