சென்னை : தமிழகத்தை சேர்ந்தவரும், ஐந்து முறை செஸ் சாம்பியன் பட்டம் வென்றவருமான செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கணினி வந்த பின் செஸ் விளையாட்டு மாறியதை பற்றி பேசி உள்ளார்.
சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் செஸ் விளையாட்டைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
செஸ் விளையாட்டின் அணுகுமுறை, அதனால் ஏற்படும் அழுத்தம், தான் ஓய்வு பெறலாம் என நினைத்த போது தான் பெற்ற முக்கிய வெற்றி என பல விஷயங்களை அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
என் அண்ணன், அக்கா செஸ் ஆடும் போது எனக்கு ஆறு வயது. அப்போது நான் என் அம்மாவிடம் எனக்கும் செஸ் கற்றுத் தருமாறு கேட்டேன். திடீரென எனக்கு செஸ் விளையாட்டில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பல ஆண்டுகளாக கடின உழைப்பை செலுத்திய பின் தான் அது வந்தது என்றார் விஸ்வநாதன் ஆனந்த்.
எண்பதுகளில் நான் கற்றுக் கொண்ட செஸ் இப்போது இல்லை. இப்போது யாரும் அப்படி செஸ் ஆடுவதில்லை. கணினியின் அறிமுகம் செஸ் விளையாட்டின் அணுகுமுறையை மாற்றி உள்ளது. செஸ் போர்டின் முன் அமரும் இரண்டு வீரர்கள் மட்டும் தான் மாறவில்லை எனவும் குறிப்பிட்டார் விஸ்வநாதன் ஆனந்த்.
செஸ் விளையாட்டில் நாம் போர்டை வெல்ல வேண்டியதில்லை. எதிரில் இருக்கும் வீரரை வெல்வது தான் முக்கியம். எல்லோரும் சிறந்த மூவ் ஆட வேண்டும் என நினைக்கிறார்கள், ஆனால் போர்டில் யார் கடைசி தவறை செய்கிறார்கள் என்பது தான் முக்கியம் என செஸ் நுணுக்கத்தை குறிப்பிட்டார்.
எங்க ஊர்ல கொரோனா இல்லையே.. லாக்டவுன் முடிந்து பயிற்சியை துவங்கிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர்!
செஸ் விளையாட்டில் நீங்கழ்க் வெற்றி பெற்றவுடன் கையை உயர்த்தி கொண்டாட முடியாது. செஸ் போன்ற விளையாட்டில் எந்த உணர்ச்சிவசப்படும் நிலையும் இல்லை. நான் போட்டிக்கு பின் என்னை அமைதிப்படுத்த எப்போதுமே ஜிம்முக்கு போவேன். அப்போது தான் அழுத்தம் என்னை விட்டுப் போகும் என்றார் விஸ்வநாதன் ஆனந்த்.
2017இல் ஓய்வு பெறுவது பற்றி சிந்தித்து வந்த போது sஉலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்றது சரியான நேரத்தில் வந்தது. எனக்கு பெரிய திருப்தி அளித்தது என தன் ஓய்வை தள்ளிப் போட வைத்த வெற்றி பற்றி பகிர்ந்தார் விஸ்வநாதன் ஆனந்த்.