டெல்லி:ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், முதுகு வலியால் தவிக்கும் இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவை, அதிக வெயிட் தூக்கக் கூடாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேசியாவில் அடுத்த மாதம் 18ம் தேதி துவங்குகிறது. இதில் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் பங்கேற்க உள்ளார் மீராபாய் சானு.
23 வயதாகும் உலக சாம்பியனான மீராபாய் சானு, காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். மே மாதத்தில் திடீரென அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது.
அதையடுத்து, டெல்லி, மும்பை என பல இடங்களில் பிரபல டாக்டர்களிடம் காட்டியுள்ளார். ஆனால், வலிக்கான காரணம் என்ன என்பது கண்டுபிடிக்க முடியவில்லை. எக்ஸ்ரே உள்ளிட்ட சோதனைகளிலும் எதுவும் தெரியவில்லை.
அதன்பிறகு, டாக்டர்கள் கொடுத்த சிகிச்சை மற்றும் பிசியோதெரபி மூலம் தற்போது தேறி வருவதாக சானு கூறியுள்ளார். பட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு மையத்தில் பயிற்சி எடுத்து வருகிறார்.
பளுதூக்கும் வீராங்கனையான தன்னை, அதிக எடையை தூக்கக் கூடாது என்று டாக்டர்கள் கூறியுள்ளதாக சிரித்துக் கொண்டே கூறுகிறார் சானு.
இருந்தாலும், மற்ற இடுப்புக்கு மேற்பகுதியை வலுப்படுத்தும் பயிற்சிகள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகிறார். வலி குறைந்து வருவதால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் கண்டிப்பாக பங்கேற்பேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.