ரசல் வெஸ்ட்புரூக்கிற்கு கொரோனா
9 முறை ஆல்-ஸ்டார் விருது மற்றும் கடந்த 2017ல் மிகுந்த மதிப்பிற்குரிய வீரர் பட்டங்களை பெற்றுள்ள ஹவுஸ்டன் ராக்கெட் குழுவை சேர்ந்த கூடைப்பந்து வீரர் ரசல் வெஸ்ட்புரூக் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. புளோரிடாவில் மீண்டும் துவங்கவுள்ள என்பிஏ சீசனில் பங்கேற்பதற்காக புறப்படவிருந்த நிலையில், அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூகவலைதளம் மூலம் உறுதி
இதையடுத்து அவரது அணி வீரர்கள் ஆர்லாண்டோவிற்கு புறப்பட்டு சென்றனர். இதனிடையே புளோரிடாவில் நடைபெறவுள்ள என்பிஏ சீசனில் தன்னுடைய நிலைமை சரியானவுடன் வெஸ்ட்புரூக் இணைந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதை டிவிட்டர் முலம் வெஸ்ட்புரூக் உறுதி செய்துள்ளார்.
பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
தான் தற்போது நலமாக உள்ளதாகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெஸ்ட்புரூக் கூறினார். நிலைமை சரியானவுடன் தன்னுடைய அணியுடன் இணைந்து கொள்வேன் என்றும், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பை தீவிரமாக எடுத்துக் கொள்ளும்படியும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டார்.
30ம் தேதி துவக்கம்
என்பிஏ சீசன் மீண்டும் வரும் 30ம் தேதி துவங்கப்பட உள்ளது. இதற்கென 22 அணிகள் ஆர்லாண்டோவின் டிஸ்னி இஎஸ்பிஎன் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்சிற்கு கடந்த வாரத்தில் வந்துள்ளன. இந்த அணி வீரர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதையடுத்து அவர்கள் பயிற்சி மேற்கொண்டு பின்னர் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.