ஒலிம்பிக் பதக்கம்
மகளிர் பளுதூக்குதலில் 49 கிலோ எடை பிரிவில் கலந்துக்கொண்ட இந்திய வீராங்கனை மீராபாய் சானு ஸ்நாட்ச் பிரிவில் இவர் 87 கிலோ தூக்கி இருந்தார். அதன்பின்னர் நடைபெற்ற க்ளின் அண்டு ஜெர்க் பிரிவில் 115 கிலோ தூக்கி அசத்தினார். இதன் மூலம் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். அதேசமயம், சீனாவின் ஜிஹுய் ஹூ 210 கிலோ மொத்த எடை தூக்கி தங்கம் வென்றார். இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள மீரா பாய், வாழ்வில் கடந்து வந்த பாதை அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் சிரமங்கள்
மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதியில் 1994-ஆம் ஆண்டு பிறந்தவர் மீராபாய் சானு. இவருக்கு மொத்தம் உடன்பிறந்தவர்கள் 5 பேர் ஆவர். மீரா பாய் தான் கடைக்குட்டி. பெற்றோருக்கும், உடன்பிறந்தவர்களின் கஷ்டத்தை போக்க, சிறுவயதிலேயே கடும் சிரமங்களை சந்தித்தவர் அவர். சிறு வயதில் விறகு கட்டைகளை வெட்டி சுமந்து சென்றுள்ளார். அப்போது அவர் தூக்கிய அந்த எடைகள் இன்று, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்துள்ளது.
தோனியும் - மீரா பாயும்
மீரா பாய் சிறு வயதில் பள்ளிக்கு செல்ல தினமும் 22 கிமீ தூரத்தை கடந்து சென்றவர். இதற்காக அந்த வயதிலேயே 2 பேருந்துகள் மாறி தினமும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட பின்னர் மீரா பாய்க்கு ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராக பணி கிடைத்தது. இது தான் அவரின் குடும்ப வறுமையையும் போக்கியது என்றே கூறலாம். இதே போன்ற ஊக்கம் கொடுக்கும் கதை தான் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்விலும் நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
முதல் ஆசை
மீரா பாய் முதலில் வில்வித்தை வீராங்கனை ஆக வேண்டும் என ஆசைப்பட்டவர். ஆனால் பின்னர் மணிப்பூரை சேர்ந்த பளு தூக்கு வீராங்கனை குஞ்சராணி தேவியால் ஈர்க்கப்பட்டு தானும் பளு தூக்கு வீராங்கனை ஆக வேண்டும் என முடிவெடுத்தார். அவரின் அந்த முடிவு மிக சரியாக அமைந்தது.
பதக்கங்கள்
2014ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மீரா பாய் 49 கிலோ எடைப்பிரிவில் கலந்துக்கொண்டார். அதில் விடாப்பிடியாக செயல்பட்ட அவர், வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தன்னுடைய ரோல் மாடலான குஞ்சுராணிதேவியின் சாதனையை முறியடித்து தேர்வானார். ஆனால் பதக்கம் வெல்ல முடியவில்லை. இந்நிலையில் தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். இவருக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.