கார் விபத்து
சக போட்டியாளர்களுடன் சேர்ந்து காரில் சென்றுக்கொண்டிருந்த போது, ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் கோர விபத்து ஏற்பட்டது. அவர்களின் காருக்கு எதிரே வந்த 12 சக்கரங்களுடன் கூடிய லாரி ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது. இதில் காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழப்பு
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஸ்வா தீனதயாளனை அருகில் இருந்தோர் மீட்டு நோங்போ சிவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் அங்கு அவரின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதனால் டேபிள் டென்னிஸ் உலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
யார் இந்த விஸ்வா தீனதயாளன்
18 வயதே ஆகும். விஸ்வா தீனதயாளன், சிறுவயதில் இருந்தே பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கங்களை குவித்துள்ளார். தனது சகோதரி விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக இருந்ததை பார்த்து, தனக்கும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததாக அவர் கூறியிருந்தார். அதற்கேற்றார் போலவே சென்னை கிருஷ்ண சுவாமி டேபிள் டென்னிஸ் கிளம் மாணவராகி, தனது பயணத்தை தொடங்கினார்.
சாம்பியன்
கடந்த 2018ம் ஆண்டு அடுத்தடுத்து பதக்கங்களை குவித்ததை அடுத்து நாட்டின் சிறந்த 15 வீரர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 2019ம் ஆண்டு மிசோரமில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். அந்த போட்டியில் கடைசி வரை போராடிய அவர், நூலிழையில் வெற்றியை தன்வசம் ஆக்கினார்.
கல்லூரி விவரம்
விஸ்வா தீனதயாளன் தற்போது சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். விளையாட்டை போலவே படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்துள்ளார். வரும் ஏப்ரல் 27ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் விஸ்வா தீனதயாளன் பங்கேற்க இருந்த நிலையில் தற்போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.