அதிர்ச்சி அளித்த WWE
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என்றும், முடிந்த வரை தனிமையில் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரெஸ்லிங் போட்டிகளை ரசிகர்கள் இல்லாத அரங்கில் நடத்தி வரும் WWE, உடல்நிலை சரியில்லாத ஒரு வீரரை போட்டியில் பங்கேற்க வைத்து அதிர்ச்சி அளித்துள்ளது.
முதன்மை
தொழில்முறை ரெஸ்லிங்கில் உலகின் முதன்மையான நிறுவனம் WWE. அதன் மன்டே நைட் ரா, பிரைடே நைட் ஸ்மேக்டவுன் ஆகிய நிகழ்ச்சிகளுடன் மாதா மாதம் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் பெரும் வரவேற்பு உள்ளது.
அதிகாரிகள் எதிர்ப்பு
அதன் வருடாந்திர நிகழ்ச்சி தான் ரெஸ்ஸில்மேனியா கடந்த 35 ஆண்டுகளாக நடந்து வந்த அந்த நிகழ்ச்சி, 36வது ஆண்டாக பிரம்மாண்டமாக நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அந்த தொடரை ரசிகர்கள் முன் நடத்த அமெரிக்க அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரசிகர்கள் இல்லாமல் நடந்த போட்டிகள்
அதன் முடிவில், அனைத்து WWE நிகழ்ச்சிகளும் கடந்த ஒரு மாதமாக ரசிகர்கள் இல்லாமல், ஸ்டுடியோக்களில் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது. அதே போலவே, ரெஸ்ஸில்மேனியா நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. அந்த நிகழ்ச்சியின் சிறப்பு போட்டியாக ரோமன் ரெய்ன்ஸ் - கோல்ட்பெர்க் மோதும் போட்டி அறிவிக்கப்பட்டு இருந்தது.
பெரும் எதிர்பார்ப்பு
அந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கோல்ட்பெர்க்கை வீழ்த்துவது அத்தனை எளிது அல்ல என்பதால், ரசிகர்கள் இரண்டு முன்னணி வீரர்கள் மோதுவதை காண ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில், ரோமன் ரெய்ன்ஸ் அந்தப் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அதற்கு ஒரு முக்கிய காரணம் கூறப்படுகிறது.
அந்த ஆபத்து
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் ரெஸ்லிங் போட்டிகள் நடத்தப்பட்டாலும், வீரர்கள் உடல்நலன் குறித்த அச்சமும் உள்ளது. WWE வெளி ஆட்களை அதிகமாக உள்ளே விடுவதில்லை என்றாலும், வீரர்கள் ஒருவருக்கு இருந்தாலும் மற்றவருக்கு பரவும் ஆபத்து உள்ளது.
அந்த வீரர் யார்?
இந்த நிலையில், ரெஸ்லிங் வீரர் "தி மிஸ்" உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்த செய்தியை அறிந்து அவருடன் போட்டியில் பங்கேற்ற மற்ற வீரர்களும், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அல்லது உடல்நலம் குன்றி தேறி வந்துள்ள சில வீரர்களும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளனர்.
14 நாட்கள் தனிமை
கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் லேசான ஜலதோஷம் இருந்தால் கூட கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அவர்களை 14 நாட்கள் தனிமையில் வைத்திருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.
ரத்தப் புற்று நோய்
இந்த நிலையில், WWE பொறுப்பற்ற நிலையில் உடல்நலம் குன்றிய வீரரை போட்டியில் பங்கேற்க வைத்துள்ளது. ரோமன் ரெய்ன்ஸ்-க்கு லூக்கிமியா எனும் ரத்தப் புற்று நோய் உள்ளது. அதனால், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு.
ரோமன் ரெய்ன்ஸ் முடிவு
இந்த நிலையில், ஏற்கனவே ஒப்புக் கொண்ட ரெஸ்ஸில்மேனியா போட்டியில் மட்டும் பங்கேற்று விட்டு அவர் போட்டிகளில் இருந்து சில காலம் விலகி ஓய்வு எடுக்க செல்வார் என கூறப்பட்ட நிலையில், WWE பொறுப்பற்று செய்த காரியத்தால் அவர் ரெஸ்ஸில்மேனியா போட்டியில் இருந்தே விலகி இருக்கிறார்.
பலரும் விலகல்
அதே போல, ரே மிஸ்டிரியோ ஜுனியர் போட்டியில் இருந்து ஏற்கனவே விலகி உள்ளார். இந்த சம்பவத்துக்குப் பின் எட்ஜ், டேனியல் பிரையன், தி ஊசோஸ், கெவின் ஓவன், பாபி லாஷ்லி, டானா ப்ரூக் ஆகியோர் விலகி உள்ளனர்.