டெல்லி: ஆஸ்திரேலியாவில் நடந்த 21வது காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையாடிய இந்திய வீரர், வீராங்கனைகள் நாடு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில், 2022ல் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் போட்டிகள் சமீபத்தில் நடந்தது. அதில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என, 66 பதக்கங்களை வென்றது. பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் 7 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என, 16 பதக்கங்களை வென்றது. இந்த நிலையில், 2022ல் இங்கிலாந்தின் பிரிமிங்ஹாமில் நடக்கும் 22வது காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்றவரான மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோட், காமன்வெல்த் போட்டி அமைப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். துப்பாக்கிச் சுடுதலை நீக்கக் கூடாது என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
அடுத்த காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால், காமன்வெல்த் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று, தேசிய ரைபிள் சங்கம் கூறியுள்ளது. இதற்கு ஜித்து ராய் உள்ளிட்ட வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அடுத்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா பங்கேற்குமா என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.