யாமகுச்சி தோல்வி
பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற 3 தகுதிச்சுற்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இந்த போட்டியில் ஜப்பானின் அகானே யாமகுச்சியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சிந்து அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டார். இதனால், இந்த சுற்றில் 21 - 13 என்ற புள்ளிக்கணக்கில் பி.வி. சிந்து முதல் செட்டை கைப்பற்றினார். 2வது சுற்றிலும் சிந்துவே ஆதிக்கம் செலுத்தினார். எனினும், முதல் செட்டை விட, யாமகுச்சி கடுமையான சவால் அளித்தார். எனினும், 2வது செட்டையும் இந்தியாவின் பி.வி.சிந்து 22 - 20 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் காலிறுதிப்போட்டியில் அகானே யாமகுச்சியை 21 - 13, 22 - 20 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிந்து.
2வது பதக்கம்
அரையிறுதி போட்டிக்கு சிந்து தகுதிப் பெற்றதால் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் உறுதியானது. எனினும், அவர் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பாகும். கடந்த ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றிருந்த நிலையில், இந்த முறை நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மீராபாய் சானு, லோவ்லினாவை தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான 3வது பதக்கத்தை பி.வி.சிந்து உறுதிசெய்துள்ளார்.
அட்டானு தாஸ் மட்டும்
பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த ஒலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வீரர்களை களமிறக்கியது இந்தியா. இதனால், அதிக மெடலை கைப்பற்றும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிகம் கவனம் இருந்த துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் கனவு பதக்கம் பூஜ்ய நிலைக்குச் சென்றது. நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பலரும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தனர். இதனால், ஒருவரால் கூட துப்பாக்கிச் சுடுதலில் மெடல் வெல்ல முடியவில்லை. அதேபோல் வில்வித்தையில் இந்தியாவுக்கு ஏமாற்றம் மிஞ்சியுள்ளது. தற்போது ஆண்கள் பிரிவில் அட்டானு தாஸ் மட்டும் காலிறுதிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.
தலைநிமிரும் இந்தியா
சரத்கமல் உள்ளிட்ட பலர், ஒலிம்பிக் பதக்க ரேஸில் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருந்தாலும், இதுவரை. இந்த நிமிடம் வரை.. கைப்பற்றப்பட்டுள்ள மூன்று பதக்கங்களும் பெண் போட்டியாளர்களால் இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வெல்ல, குத்துச்சண்டையில் லோவ்லினா காலிறுதிப் போட்டியில் வென்று வெண்கல பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார். இப்போது பேட்மிண்டனில் பி.வி.சிந்து.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
ஒருகாலத்தில் சமையலறையில் மட்டும் வைக்கப்பட்டிருந்த பெண்கள் தான், இன்று ஒலிம்பிக்கில் பதக்கங்களை இந்தியாவுக்கு வென்றுக்கொடுத்து, நாட்டின் பெருமையை பாதுகாத்துள்ளனர். ஒருவாரமாக ஒரு மெடலை வைத்துக் கொண்டு தடுமாறிய இந்தியாவை, ஒரேநாளில் 2 மெடல்களை பெற்றுக் கொடுத்து, இந்தியாவை பதக்கப்பட்டியலில் முன்நகர்த்தி கொண்டுச் சென்றிருக்கின்றனர். இவர்கள் வெண்கலப்பதக்கத்தோடு நின்று விடாமல், தங்கப்பதக்கத்தையும் வெல்ல வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.