5000 மீட்டர் ஓட்டப்பந்தயம்
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் கத்தார் நாட்டில் நடை பெற்று வருகிறது. அதில் நடந்த 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கினியா பிசா நாட்டை சேர்ந்த டாபோ, அருபா நாட்டை சேர்ந்த பஸ்பி கலந்து கொண்டனர்.
பஸ்பிக்கு என்ன ஆச்சு?
5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடிக் கொண்டே இருந்த போது பஸ்பி ஓட முடியாத அளவுக்கு நிலை குலைந்தார். உடலில் சக்தி இல்லாததால் அவர் தடுமாறினார். அப்போது அவருக்கு அருகில் ஓடி வந்த டாபோ உதவி செய்தார்.
டாபோ உதவி
டாபோ அவரை ஒரு கையால் தாங்கிக் கொண்டே சிறிது தூரம் ஓடினார். பின்னர், அவர் கையை தன் தோள் மேல் போட்டுக் கொண்டு அவரை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு சென்று எல்லைக் கோட்டை எட்டினார். .
கைதட்டிய ரசிகர்கள்
இவர்கள் இருவரும் தான் அந்த பந்தயத்தில் கடைசியாக வந்தவர்கள். இவர்கள் இருவரும் முதலில் வந்தவரை விட ஐந்து நிமிடம் தாமதமாக வந்தாலும், ஒருவரின் போராட்டக் குணத்துக்கும், மற்றொருவரின் உதவும் குணத்துக்கும் ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டி அவர்களை பாராட்டினர்.
தங்கப் பதக்கம்
டாபோ தான் ஓடுவதையும் விட்டு செய்த உதவி விளையாட்டு மீதான மதிப்பை அதிகப்படுத்துகிறது என்பதை அடுத்து அவருக்கு விளையாட்டு நேர்மைக்கான தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பு
ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த டாபோ, பஸ்பி இருவருமே உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில், 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க குறைந்தபட்ச தகுதிகளை பெறாவிட்டாலும், ஒவ்வொரு நாட்டில் இருந்தும் சிறப்பு அழைப்பின் பேரில் ஒருவர் பங்கேற்கலாம் என்ற வழியில் இந்த தொடரில் பங்கேற்றவர்கள்.
சாதனையும் செய்தார்
டாபோ இந்த தொடரில் தன்னால் வெல்ல முடியாது என்பது தெரிந்தே தான் விளையாடி இருக்கிறார். அவரது நோக்கம் தன் தனிப்பட்ட சாதனையை தானே முறியடிப்பது மட்டுமே. பஸ்பிக்கு உதவி செய்தாலும், அவர் தன் சாதனையை முறியடித்து அசத்தினார்.
பஸ்பி தகுதி நீக்கம்
பஸ்பி, டாபோவின் உதவியுடன் தான் எல்லையை கடந்தார் என்பதால் அவர் இந்தப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனினும், அவரும், டாபோவும் ரசிகர்களின் மனதை வென்றனர்.