அமெரிக்கா: உலக தடகள போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ரோகித் யாதவ் தகுதிப்பெற்று அசத்தியுள்ளனர்.
உலக தடகள சாம்பியன் தொடர் அமெரிக்காவில் உள்ள ஆரிகானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் நீரஜ் சோப்ராவும், குரூப் பி பிரிவில் ரோகித் யாதவும் கலந்துக்கொண்டனர்.
இன்று முதலில் நடைபெற்ற ஏ பிரிவுக்கான ஆட்டத்தில் களமிறங்கிய ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா, தனது முதல் முயற்சிலேயே 89.94 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து அசத்தினார். இதன்பின்னர் வீசிய 5 வாய்ப்பிலும் குறைந்த தூரமே வீசினார். எனினும் தனது முதல் வாய்ப்பிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார்.
இந்நிலையில் 'பி' பிரிவில் இடம்பெற்றிருந்த ரோகித் யாதவும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ரோகித்திற்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளில் அதிகபட்சமாக 80.42 மீ தூரத்திற்கு வீசினார். இதன் அடிப்படையில் அவரும் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார்.
இவர்கள் இருவரும் அடுத்ததாக வரும் ஜூலை 15ம் தேதி நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் பங்குபெறவுள்ளனர். இதில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றுவிட்டால், 19 ஆண்டுகளுக்கு பின் உலக தடகளத்தில் பதக்கம் வெண்ற இந்தியர் என்ற சாதனையை அவர் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.