போகோடா: பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் நெய்மரை காலால் இடித்துத் தள்ளிய கொலம்பியா வீரர் ஜூனிகாவிற்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதிச் சுற்று ஆட்டத்தில் கொலம்பியா - பிரேசில் அணிகள் மோதின. இப்போட்டியில் பிரேசிலின் நம்பிக்கை நட்சத்திரமான நெய்மரின் முதுகில் கொலம்பியாவின் வீரர் ஜூனிகா முழங்காலால் இடித்து கீழே வீழ்த்தினார்.
எதிர்பாராத இந்தத் தாக்குதலால் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு நெய்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அவர் போட்டியை விட்டு விலகும் சூழ்நிலை ஏற்பட்டது. நெய்மர் இல்லாத காரணத்தினால் அரை இறுதிச் சுற்றில் ஜெர்மனியிடம் தன்னுடைய கோப்பை கனவை 7-1 என்ற கணக்கில் இழந்தது பிரேசில்.
இந்த நிலையில் நெய்மாரின் காயத்துக்கு காரணமான கொலம்பியா வீரர் ஜூனிகாவுக்கு ரசிகர்களிடம் இருந்து பல்வேறு வகையில் மிரட்டல்கள் வருவதாக செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து ஜூனிகாவுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க கொலம்பியா கால்பந்து சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதே நேரத்தில் ஜூனிகாவும், நெய்மரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதைப் பற்றி கூறிய நெய்மர் "ஜூனிகா எனக்கு தொலைபேசியில் அழைத்து, தான் இதை எந்த உள்நோக்கத்துடன் செய்யவில்லை என்று மன்னிப்பு கேட்டு விட்டார். நானும் அவருடைய எதிர்பாராத பிழையை மன்னித்துவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.