கேப் டவுன் : இதுபோன்ற மோசமான வைரஸ் தொற்றை தான் இதுவரை பார்த்ததில்லை என்று தென்னாப்பிரிக்க ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் கேமரான் வான் டர் பர்க் தெரிவித்துள்ளார்.
கடந்த 14 நாட்களாக இந்த வைரசுடன் தான் போராடி வருவதாகவும், எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்பவர்களையும், இந்த வைரஸ் பாடுபடுத்துவதாகவும் கூறியுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த 2018ல் ஓய்வு பெற்ற கேமரான் வான் டர் பர்க், கடந்த 2012ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் பந்தயத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர். மேலும் நீச்சல் போட்டியில் உலக சாதனை படைத்தவர்.
சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் உலக சாதனை புரிந்த தென்னாப்பிரிக்க நீச்சல் வீரர் கேமரான் வான் டர் பர்க், கடந்த 2012ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தங்க பதக்கம் வென்றவர். இதேபோல கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் பந்தயத்தில் வெள்ளி பதக்கத்தை வென்ற இவர் 2018ல் உலக சாம்பியன் போட்டிகளில் தங்கம் வென்று, அத்துடன் ஓய்வை அறிவித்தவர்.
இதனிடையே, தன்னை போன்ற வலிமையான நுரையீரலுடன், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்துவரும் வீரரையே பாடுபடுத்தும் கொரோனா வைரஸ் போன்ற ஒன்றை தான் இதுவரை சந்தித்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.கொரோனாவின் அதிதீவிர காய்ச்சல், சோர்வு, இருமல் போன்றவற்றை தான் தொடர்ந்த அனுபவித்து வருவதாகவும், சிறிய நடை நடந்தாலும் அதற்காக தான் பல மணிநேரங்கள் அதிகமான சிரமத்தை அனுபவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக விளையாட்டு வீரர்கள், போட்டிகளை அருகாமையில் வைத்துக் கொண்டு, இத்தகைய வைரஸ் தொற்றுக்கு ஆளாவது மிகவும் கொடுமையானது என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய வான் டர் பர்க், ஒலிம்பிக் போட்டிகள் குறித்த தெளிவின்மை நிலவிவரும் நிலையில், வீரர்கள் தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது என்றும் கூறியுள்ளார். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ள வான் டர் பர்க், COVID-19 வைரஸ் விளையாட்டு இல்லை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.