தடைபெற்ற மல்யுத்த வீரர்
கடந்த 2016ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார் மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ். இதையடுத்து அவருக்கு நான்கு ஆண்டுகள் தடைவிதித்து சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு கழகம் உத்தரவிட்டது. 74 கிலோ எடைப்பிரிவில் அந்த தொடரில் நர்சிங் யாதவ் பங்கேற்கவிருந்த நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டது.
சர்வதேச போட்டிகளில் பங்கேற்கலாம்
இந்நிலையில் தற்போது நர்சிங் யாதவின் தடை விலக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து நர்சிங் யாதவ் டோக்கியோ ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பு
இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள நர்சிங் யாதவ், அடுத்துவரும் சர்வதேச போட்டிகளில் தான் 74 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று ஆட அனுமதிக்குமாறு மல்யுத்த கூட்டமைப்பிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறினார். வரும் டிசம்பரில் செர்பியாவில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் இவர் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பயிற்சிக்கு கால அவகாசம்
இதனிடையே, மற்ற எந்த தொடர்களில் பங்கேற்றாலும், ஒலிம்பிக்கில் மெடல் வாங்காமல் தன்னுடைய கதை முடியாது என்று நர்சிங் யாதவ் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பயிற்சிகளை மேற்கொள்ள தனக்கு கால அவகாசம் கிடைத்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.