டெல்லி: இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களின் ஒருவர் யோகேஷ்வர் தத். 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 60 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 60 கிலோ மல்யுத்த பிரிவில் ரஷிய வீரர் பெசிக் குடுகோவ் வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார். 2013ம் ஆண்டு ரஷியாவில் நடந்த விபத்தில் அவர் உயிர் இழந்தார்.
தற்போது ரஷ்யா ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியுள்ளதால், 2012ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கலந்து வீரர்கள், ரத்த மாதிரி மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது பெசிக் குடுகோவ் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது பதக்கம் பறிக்கப்படுகிறது.
இதனால் அந்த பிரிவில் வெண்கலம் வென்றிருந்த யோகேஷ்வர் தத் வெள்ளிப்பதக்கத்தை பெறுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்வதேச மல்யுத்த சங்கமும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் அறிவிக்கும். சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு யோகேஷ்வர் தத்தின் வெண்கலப் பதக்கம் வெள்ளி பதக்கமாக மேம்படுத்தப்படுகிறது.
Besik Kudukhov शानदार पहलवान थे। उनका मृत्यु के पश्चात dope test में fail हो जाना दुखद हैं। मैं खिलाड़ी के रूप में उनका सम्मान करता हूँ।
— Yogeshwar Dutt (@DuttYogi) August 31, 2016
இதனிடையே இந்த பதக்கம் தனக்கு வேண்டாம் என்று யோகேஷ்வர் தத் டிவிட்டரில் கூறியுள்ளார். பெசிக் குடுகோவ் சிறந்த வீரர். அவர் இறந்துள்ள நிலையில், ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளது சோகம். ஒரு விளையாட்டு வீரர் என்ற வகையில் அவரை நான் மதிக்கிறேன். வாய்ப்பு இருக்குமானால், வெள்ளி பதக்கம், பெசிக் குடுகோவ் குடும்பத்தினரிடமே இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.
அப்படி செய்வதுதான், உயிரிழந்த பெசிக் குடுகோவ் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும். என்னை பொறுத்தளவில், மனிதாபிமானம்தான் எல்லாவற்றையும்விட உயர்வானது என்று நினைக்கிறேன். இவ்வாறு டிவிட் செய்துள்ளார் யோகேஷ்வர் தத்.
இதுதான் உண்மையான விளையாட்டு வீரனுக்கு அழகு என பாராட்டுகிறார்கள் அவரின் ரசிகர்கள்.