டெல்லி: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ரோஜர் பெடரருக்கு கால் இறுதியில் அதிர்ச்சி தோல்வி அளித்த கெவின் ஆன்டர்சன் யார் தெரியுமா. தென்னாப்பிரிக்க கிரி்க்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஏபி டிவில்லியர்சிடம் முன்பு தோல்வி அடைந்தவர்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த கால் இறுதியில் நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சனை சந்தித்தார்.
9வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட பெடரருக்கு நேற்றைய ஆட்டத்தில் அதிர்ச்சி அளித்தார் ஆன்டர்சன். 4 மணி நேரத்துக்கு மேலாக நடந்த அந்த ஆட்டத்தில் ஆன்டர்சன் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
6 அடி 8 அங்குலம் உயரமுள்ள ஆன்டர்சன், உலகத் தரவரிசையில் 8வது இடத்தில் உள்ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் யுஎஸ் ஓபன் போட்டியில் கடந்த ஆண்டு பைனல் வந்தார். மற்றபடி மற்றவற்றில் நான்காவது சுற்றை தாண்டியதில்லை.
20 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜாம்பவானான பெடரரை அவர் வீழ்த்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், முன்பு ஒரு பேட்டியின்போது, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் ஏபி டிவில்லியர்சிடம் தோல்வியடைந்த சம்பவத்தை அவர் கூறியிருந்தார்.
டிவில்லியர்ஸ், தென்னாப்பிரிக்காவில் ஜூனியர் பிரிவில் டென்னிஸ் விளையாடியுள்ளார். அப்போது, நடந்த ஒரு போட்டியில் ஆன்டர்சனை வென்றுள்ளார். பெடரரை வென்றதை பெருமையாக கருதும் ஆன்டர்சன், அதே நேரத்தில் டிவில்லியர்சிடம் தோல்வியடைந்ததையும் பெருமையாகவே கருதியுள்ளார். ஜூனியர் பிரிவில் இருவரும் விளையாடிய காலத்தில் டிவில்லியர்ஸ் மிகவும் பிரபலமான வீரராக இருந்தார்.