விசா ரத்து
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதற்காக ஜோகோவிச் ஆஸ்திரேலியா வந்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்று இருப்பதாக மருத்துவ சான்றிதழும் ஜோகோவிச்சிடம் உள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் விளையாட அனுமதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தவறான விசாவை விண்ணப்பித்துள்ளதாக கூறி, அதனை ஆஸ்திரேலிய அதிகாரிகள் ரத்து செய்தனர்
தனிமையில் ஜோகோவிச்
இதனையடுத்து, தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஜோகோவிச் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஜோகோவிச், மெல்போர்னில் உள்ள பார்க் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஜோகோவிச் தனது நிலை குறித்து செர்பிய அரசிடம் புகார் அளித்துள்ளார்.
செர்பிய அதிபர் கண்டனம்
இதனால் களத்தில் குதித்த செர்பிய அதிபர் அலெக்சாண்டர், ஜோகோவிச்சை ஆஸ்திரேலிய அரசு தவறாக நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்தார். ஜோகோவிச்சுக்கு எதிராக நடைபெறும் அநீதியை தடுக்க, தங்களது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார். தடுப்பூசி இல்லாமல் விளையாட 20 வீரர்களக்கு அனுமதி அளித்த ஆஸ்திரேலிய அரசு, ஜோகோவிச்சை மட்டும் தடுத்து நிறுத்தியது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
ஆஸி. அரசு பதிலடி
செர்பிய அதிபருக்கு பதிலடி தந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன். ஆஸ்திரேலியாவின் சட்ட விதிகள் படி அனைவரும் சமம் என்று தெரிவித்தார். ஜோகோவிச்சுக்காக சட்டம் வளையாது என்றும் அவர் கூறியுள்ளார். ஜோகோவிச் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் இரு நாட்டுக்கு இடையே பிரச்சினையாக மாறிவிட்டது. செர்பிய மக்களும் ஆஸ்திரேலிய அரசை கண்டித்து சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.