இம்மாதம் துவக்கம்
108வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளை வரும் 20ம் தேதி துவங்கி பிப்ரவரி 2ம் தேதிவரை நடத்த டென்னிஸ் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
அபாயமான காற்றின் தரம்
இதனிடையே கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் பரவிவரும் காட்டுத்தீயால் அந்நாட்டின் பல பகுதிகளில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரமும் மோசமான நிலையிலிருந்து அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தள்ளி வைக்க வீரர்கள் கோரிக்கை
காட்டுத்தீ குறித்து கவலை தெரிவித்துள்ள டென்னிஸ் வீரர்கள் நோவக் ஜோகோவிச் மற்றும் ஆஷ்லீ பார்டி உள்ளிட்டோர், வீரர்கள் மற்றும் ரசிகர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
டென்னிஸ் ஆஸ்திரேலியா நம்பிக்கை
இதனிடையே போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று டென்னிஸ் ஆஸ்திரேலியாவின் தலைமை செயலாளர் கிரேக் டைலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிரேக் டைலி திட்டவட்டம்
போட்டிகளை தள்ளிவைக்கும் மற்றும் இடமாற்றம் செய்யும் திட்டமில்லை என்று கிரேக் டைலி மேலும் தெரிவித்துள்ளார். வீரர்கள் மற்றும் ரசிகர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு நிபுணர்களின் உதவியுடன் அந்தப்பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
போட்டிகளை நடத்த திட்டம்
மேலும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், உலக அளவில் டென்னிஸ் வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளை நடத்தவும் டென்னிஸ் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.