செரீனா சர்ச்சை
அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் இறுதிப் போட்டியில் ஜப்பானின் ஒசாகாவை சந்தித்தார் செரீனா. இடையில் நடுவர் பார்வையாளர் பகுதியில் இருந்து ஆலோசனை பெற்றதாக கூறி விதித்த பெனால்டியால் கோபமடைந்தார் செரீனா. நடுவரோடு கடும் சண்டை போட்டார். அதற்கு போட்டியின் போதே தண்டனையாக புள்ளிகளை இழந்தார். போட்டி முடிந்த பின் பெரும் சர்ச்சையானது இந்த விவகாரம். அமெரிக்க டென்னிஸ் அமைப்பால் 17000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
அடுத்து கார்ட்டூன்
ஆஸ்திரேலியா ஊடகத்தில் வெளியான கார்ட்டூன் ஒன்றில் இந்த விவகாரம் கிண்டல் செய்யப்பட்டு இருந்தது. அதில், செரீனா தன் டென்னிஸ் ராக்கெட்டை போட்டு மிதித்துக் கொண்டு இருப்பது போலவும், நடுவர் மற்றொரு போட்டியாளரான ஒசாகாவிடம், "நீங்கள் அவரை வெல்ல வைத்து விடுங்கள்" என கூறுவது போல சித்தரிக்கப்பட்டு இருந்தது.
கடும் எதிர்வினை
இந்த கார்ட்டூன் சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினையை பெற்று வருகிறது. அமெரிக்க அரசியல்வாதிகள், பிரபல எழுத்தாளரான ஜே.கே.ரௌலிங் என பலரும் இதை கண்டித்துள்ளனர். ஜே.கே.ரௌலிங் தன் பதிவில், "ரொம்ப நல்லது. தற்போது வாழ்ந்து வருபவர்களில் மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனையை இனவாதி, பாலினவாதி என்ற அளவுக்கு சுருக்கிவிட்டீர்கள்" என சாடியுள்ளார்.
பதில் சொன்ன கார்டூனிஸ்ட்
இதற்கு பதில் அளித்த அந்த கார்டூனிஸ்ட் நைட் என்பவர், "இங்கே இனம் பற்றிய பேச்சே இல்லை. எல்லாமே, குணம் பற்றி தான் இருக்கிறது" என தன் கார்ட்டூன் அர்த்தம் பற்றி விளக்கினார். எனினும், பார்ப்பவர்கள் அப்படி நினைக்கவில்லையே?