மெல்போர்ன் : 2020 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் ரோஜர் பெடரரை நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செர்பியாவின் நோவாக் ஜோகோவிக்.
ஆண்டின் முதல் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முக்கிய அரையிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த முன்னணி வீரர் ரோஜர் பெடரர் - செர்பியா நாட்டை சேர்ந்த நோவாக் ஜோகோவிக் மோதினர். இரண்டு முன்னணி வீரர்கள் மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
போட்டியின் முதல் செட்டில் ஒரு கட்டத்தில் பெடரர் 4 - 1 என முன்னிலையில் இருந்தார். அப்போது வேகம் எடுத்த ஜோகோவிக் அந்த செட்டை டை-பிரேக்கர் வரை எடுத்துச் சென்றார்.
டை-பிரேக்கரில் முதல் செட்டை 7 - 6 (7 - 1) என கைப்பற்றினார் ஜோகோவிக். முதல் செட்டை போராடி வென்றாலும், அடுத்த இரண்டு செட்களில் எந்த சிக்கலும் இன்றி 6 - 4, 6 - 3 என எளிதாக கைப்பற்றி அசத்தினார் ஜோகோவிக்.
ரோஜர் பெடரர் ஒரு செட்டை கூட கைப்பற்றாத நிலையில், 7 - 6, 6 - 4, 6 - 2 என்ற நேர் செட்களில் ஜோகோவிக்கிடம் வீழ்ந்தார். இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிக் ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப் போட்டியிலும் வெல்லும் பட்சத்தில் ஜோகோவிக் தன் 17வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரையிறுதிப் போட்டியில் பெடரர் தன் முழு பலத்துடன் ஆடவில்லை. அவர் காயம் காரணமாகவே சரியாக விளையாடவில்லை என கூறப்படுகிறது.