அஸரெங்கா தோல்வி
நியூயார்க்கில் நேற்று நடந்து முடிந்துள்ள யுஎஸ் ஓபன் 2020 டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, பெலாரசின் விக்டோரியா அஸரெங்காவை 3 செட்களில் போட்டியிட்டு வெற்றி கொண்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளர் செரீனா வில்லியம்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அஸரெங்கா தற்போது தோல்வியை கண்டுள்ளார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
கடந்த 2012 மற்றும் 2013ல் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள அஸரெங்கா, அதையடுத்து சொந்த பிரச்சினைகள் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக எந்த கிராண்ட்ஸ்லாம் டைட்டிலின் இறுதிப்போட்டி வரையிலும் வரமுடியாமல் திணறிய நிலையில், தற்போது இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தன்னை நிரூபித்துள்ளார்.
பல போட்டிகளில் பங்கேற்க உத்வேகம்
இந்நிலையில் தோற்றாலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தனக்கு பெருமை அளித்துள்ளதாக அஸரெங்கா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதன்மூலம் தன்னுடைய நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் மேலும் பல கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்க உத்வேகம் பிறந்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தோல்வி வருத்தமளித்தது
கடந்த 2 வாரங்களாக யுஎஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடிவந்த அஸரெங்கா, இந்த காலகட்டம் தனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்ததாக தெரிவித்துள்ளார். இந்த தோல்வி தனக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை என்றும் ஆனால் வருத்தமளித்ததாகவும் அஸரெங்கா மேலும் கூறினார். முடிவு குறித்து கவலை கொள்ளாமல் முனைப்புடன் தான் போட்டிகளை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.