சென்னை: சென்னையில் இன்று தொடங்கிய டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, பிரேசிலின் தாமஸ் பெலுச்சியிடம் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தார்.கடுமையான போட்டியாக இது விளங்கி ரசிகர்களுக்கு பெரும் விருந்தளித்தது. இப்போட்டியில், போபண்ணா 7-6 (2), 6-7 (7), 5-7, 6-4, 10-8 என்ற நீண்ட செட்களில் தோல்வியைச் சந்தித்தார்.இந்தத் தோல்வியின் மூலம் பிரேசில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இன்று மாலை நடைபெறும் 2வது போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மனும், பிரேசிலின் ரிக்கார்டோ மெலோவும் மோதவுள்ளனர்.முன்னதாக 31 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு வந்துள்ள டேவிஸ் கோப்பைப் போட்டியின் இதற்கான துவக்க விழா மற்றும் வீரர்கள் மோதும் நிகழ்ச்சி நிரலை தேர்வு செய்வதற்கான குலுக்கல் (டிரா) நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கில் நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு டேவிஸ் கோப்பையை துவக்கி வைத்தார்.வீரர்களுக்கான மோதல் அட்டவணையையும் அவர் குலுக்கல் மூலம் தேர்வு செய்தார். அப்போது முதல்வர் பேசுகையில்,31 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டேவிஸ் கோப்பை போட்டி நடைபெறுவது மகிழ்ச்சியை தருகிறது. 1979ம் ஆண்டு கடைசியாக சென்னையில் மெட்ராஸ் ஜிம்கானா கிளப்பில் டேவிஸ் கோப்பை நடைபெற்றது. அதன்பிறகு தற்போது டேவிஸ் கோப்பை சென்னைக்கு திரும்பி உள்ளது.டென்னிஸ் ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும். அந்த காலத்தில் தற்காலிக அரங்கில் போட்டி நடைபெற்ற காலத்திலிருந்து நாம் முன்னேறி வந்துள்ளோம். தமிழகத்தில் தற்போது விளையாட்டுப் போட்டிகளுக்கான உலகத் தரம் வாய்ந்த அரங்குகள் உள்ளன.சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை ஆண்டுதோறும் நடத்துவதன் மூலம் சென்னை மற்றும் தமிழகத்தை சர்வதேச விளையாட்டுகளுக்கான கேத்திரமான உலக வரைபடத்தில் நிலைநிறுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.சென்னையில் வளர்ந்த சோம்தேவ் தேவ்வர்மன், லியாண்டர் பயஸ், மகேஷ்பூபதி மற்றும் போபண்ணா இந்த போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சியை தருகிறது. டேவிஸ் கோப்பையில் 20 ஆண்டுகள் நிறைவு செய்வதற்காக லியாண்டர் பயசுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். பிரேசில் வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்றார்.தமிழக டென்னிஸ் சங்க தலைவர் அழகப்பன், துணைத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் கார்த்தி ப.சிதம்பரம் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.யார் யார்?ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சார்பில் சோம்தேவ் வர்மன், ரோஹன் போபன்னா ஆகியோரும், இரட்டையர் பிரிவில், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடியும் மோதவுள்ளனர். மொத்தம் இரண்டு ஒற்றையர் ஆட்டங்கள், ஒரு இரட்டையர் ஆட்டம் மற்றும் இரண்டு மாற்று இரட்டையர் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. நாளைய போட்டி: நாளை இரட்டையர் பிரிவு போட்டி நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு இது நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை மாற்று ஒற்றையர் போட்டிகள் நடைபெறும். இதில் போபன்னா-மெலோ, தேவ்வர்மன்-பெலுச்சி ஆகியோர் மோதுவார்கள். பயஸுக்குப் பாராட்டு விழா: முன்னதாக நாளை இரவு 7 மணியளவில் டேவிஸ் கோப்பைப் போட்டியில் 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள லியாண்டர் பயஸுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.