டென்னிஸ் வீராங்கனை
உலகின் முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையும், சீனாவை சேர்ந்தவருமான பெங் சுயி, கடந்த மாதம் Me too புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன் படி, சீனாவின் முன்னாள் துணை அதிபரான சாங் கயோலி, தமக்கு பாலியல் தொந்தரவை அளித்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். பெங் சுயின் இந்த குற்றச்சாட்டு சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு பெரும் தலைகுனிவை தந்தது
மாயம்
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி காத்திருந்தது. சீன முன்னாள் துணை அதிபர் குறித்து புகார் அளித்த டென்னிஸ் வீராங்கனை பெங் சுயி மாயமாகிவிட்டார். அவர் பற்றி எந்த தகவலும் தற்போது யாருக்கும் தெரியவில்லை. மேலும் அவர் அளித்த குற்றச்சாட்டும் இணையத்திலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
கண்டனம்
முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மாயமாகிய சம்பவத்திற்கு மகளிர் டென்னிஸ் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன வீராங்கனை பெங் சுயி குறித்து அந்த நாட்டு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அவரை கண்டுபிடுத்து தர வேண்டும் என்றும் டென்னிஸ் சம்மேளனம் கூறியுள்ளது. பெங் சுயி மாயமான விவகாரம் அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் டென்னிஸ் வீராங்கனை கிறிஸ் எவர்ட் கருத்து தெரிவித்துள்ளார். பலரும் பெங் சுயி எங்கே என்று சமூக வலைத்தளத்தில் ஹேஷ் டேக் மூலம் பதிவிட்டு வருகின்றனர்
விளக்கம்
இதனிடையே சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரிடம் பெங் சுயி குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு தாம் அப்படி ஒரு சம்பவத்தை கேள்விப்படவில்லை என்றும், இது ராஜங்க ரீதியான கேள்வி கிடையாது என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். ஏற்கனவே சீனாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் தற்போது டென்னிஸ் வீராங்கனையே மாயமாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.