விம்பிள்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் வென்றிருக்கிறார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், முன்னாள் சாம்பியனான பெடரரும் மோதினர்.
5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6, 1-6, 7-6, 4-6, 13-12(7-3) என்ற செட் கணக்கில் 1பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் 5வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார்.
இதுவரை இருவரும் 47 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அதில் 25 முறை ஜோகோவிச்சே வென்றிருந்தாலும், அரையிறுதியில் மற்றோர் ஜாம்பவானான நடாலை வீழ்த்தினார் பெடரர். எனவே, அவர் தான் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தனது உலக சாதனையை முறியடித்து 9வது விம்பிள்டன் பட்டத்தையும், 21வது கிராண்ட் ஸ்லாமையும் பெடரர் வசப்படுத்துவார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் கடும் போட்டியை ஏற்படுத்திய ஜோகோவிச், 5 மணி நேரம் போராடி பெடரரை சாய்த்து, சாம்பியனாகி இருக்கிறார்.