லண்டன்: 2020ஆம் ஆண்டுக்கான ஏடிபி விருது செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச்சிற்கு அளிக்கப்பட்டுள்ளது. அவருடன் ரோஜர் பெடரர், ரஃபேல் நடால், பிரான்சிஸ் தியாஃபோ ஆகியோருக்கும் விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் தலைசிறந்து விளங்கும் டென்னிஸ் வீரர்களுக்கு ஏடிபி விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2020ஆம் ஆண்டிற்கான ஏடிபி விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் இந்தாண்டு எட்டாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். மேலும், இந்தாண்டு நடைபெற்ற மற்ற நான்கு தொடர்களையும் ஜோகோவிச் கைப்பற்றினார். இதன் மூலம் ஆறாவது முறையாக ஆண்டு இறுதியில் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு சிறந்த வீீரருக்கான ஏடிபி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் ஃபெடரர் இந்தாண்டு முழுவதும் ஒற்றையர் பிரிவில் மட்டுமே விளையாடினார். அவருக்கு 18ஆவது ஆண்டாகச் சிறந்த ஒற்றையர் ஆட்டக்காரர் என்ற ரசிகர்கள் தேர்ந்தெடுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சமீபத்தில் 13வது ரோலண்ட் கரோஸ் க்ரவுன் வென்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடாலுக்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஸ்டீபன் எட்பெர்க் விளையாட்டுத்திறன் விருது வழங்கப்பட்டது.
இந்தாண்டு மட்டும் ஐந்து பட்டங்களை வென்ற ரஷ்யாவின் ஆண்ட்ரி ருப்லெவ் தரவரிசைப் பட்டியலில் 23ஆவது இடத்திலிருந்து 8ஆம் இடத்திற்கு முன்னேறினார். அவருக்கு ஆண்டின் மிகவும் மேம்பட்ட வீரர் என்ற விருது வழங்கப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்சிஸ் தியாஃபோ என்ற வீரருக்குச் சிறந்த சமூக சேவைக்கான ஆர்தர் ஆஷே விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கறுப்பின டென்னிஸ் சமூகத்தை ஒன்றிணைக்கும் வகையில் பிரான்சிஸ் தியாஃபோ வெளியிட்ட வீடியோ பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.
ஸ்பெயினின் 17 வயதான கார்லோஸ் அல்கராஸ் என்ற வீரருக்குச் சிறந்த புதுமுக வீரருக்கான விருது வழங்கப்பட்டது.
கனடா நாட்டைச் சேர்ந்த வசெக் போஸ்பிசில் என்பவருக்குச் சிறந்த கம்பேக் வீரருக்கான விருத அளிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், இந்தாண்டு இரண்டு தொடரில் இறுதிப் போட்டியை அடைந்தார். கடந்தாண்டு தரவரிசை பட்டியலில் 150ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்ட அவர், இந்தாண்டு மீண்டும் 61ஆம் இடத்திற்கு முன்னேறினார்.