26 வயதில் ஓய்வு பெற்ற வீராங்கனை
முன்னாள் அர்ஜெண்டினா டென்னிஸ் வீராங்கனை கேப்ரியல் சபாடினி, தனது சிறப்பான ஆட்டம் மூலம் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை கொண்டவர். தான் மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்த போதே, தன்னுடைய 26வது வயதில் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெற்று தன்னுடைய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர். இவர் தொடர்ந்து ஆடியிருந்தால் மேலும் சாதனைகள் இவர் கைவசம் இருந்திருக்கும்.
ஸ்டெபி கிராப்பிடம் வெற்றி
தன்னுடைய 8வது வயதிலேயே தன்னுடைய முதல் தொடரில் வெற்றி பெற்று அனைவரையும் அவர் பக்கம் திரும்ப வைத்தார் சபாடினி. இதனிடையே 1984ல் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பெற்ற வெற்றி மூலம் உலக ஜூனியர் நம்பர் ஒன்னாக விளங்கினார். 13 ஆண்டுகள் தொடர்ந்த இவரது சாதனை பயணத்தில் 1990ல் ஸ்டெபி கிராப்பை அமெரிக்க ஓபன் தொடரில் தோற்கடித்த சாதனையும் ஒன்று.
இந்திய கலாச்சாரம் சிறப்பு
இந்தியாவில் இவருக்கான ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த சபாடினி, தான் கூடியவிரைவில் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் கலாச்சாரம், உணவு, ஆயுர்வேதம், யோகா போன்ற அனைத்தும் தன்னை கவர்வதாகவும் சபாடினி உற்சாகத்துடன் தெரிவித்தார்.
சூழ்நிலையே காரணம்
26 வயதிலேயே தான் ஓய்வு பெற்றதற்கு அப்போதைய சூழலே காரணம் என்று சபாடினி கூறினார். தான் மனதளவில் வெறுமையை உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய வீராங்கனைகளில் செரீனா வில்லியம்ஸ் மிகவும் சிறப்பாக விளையாடி வருவதாகவும் அவருடன் இணைந்து தான் ஆட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
வெட்கப்பட்ட சபாடினி
தன்னுடைய இளம் வயதில் சபாடினி மீது தனக்கு ஆசை இருந்ததாக பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஒரு பேட்டியின்போது தெரிவித்திருந்தார். இதுகுறித்து சபாடினியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, இதுபோன்ற விஷயங்களை பேச தனக்கு வெட்கமாக உள்ளதாக கூறி நழுவிய சபாடினி, ஒரு முகஸ்துதிக்காக அவர் அவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.