டெல்லி:ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வேண்டிய இந்திய வீரர்கள், வீராங்கனைகள் டெல்லி விமான நிலையத்தில் தவிக்க விடப்பட்டனர். அவர்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் மீது புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு நடத்தும் ஆஸ்திரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்ன் நகரில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்காக 17 பேர் கொண்ட இந்திய வீரர்கள், வீராங்கனைகள் குழுவினர் டெல்லி விமான நிலையத்துக்கு வந்தனர். ஆனால், அதில் 10 பேருக்கு மட்டுமே டிக்கெட் கன்பர்ம் ஆகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
விமானத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்கப்பட்டுவிட்டதால், மற்றவர்களை ஏற்றிச் செல்ல முடியாது என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் கூறியுள்ளது. இதனால் மணிகா பத்ரா, சீனியரான மவுமா தாஸ் உள்பட 7 பேர் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் விமான நிலையத்திலேயே தவித்தனர்.
உடன் சமூகதளம் மூலமாக விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோடின் உதவியை நாடினார் மணிகா பத்ரா. இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு அதிகாரிகளும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுத்து, மற்றொரு விமானம் மூலம் அவர்களை மெல்போர்ன் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனிடையில், டேபிள் டென்னிஸ் குழு பயணம் செய்வது குறித்து எந்த முன் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. வேறு வேறு பிஎன்ஆர் எண்களில் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர சிலர் தாமதமாக வந்ததால், மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று ஏர் இந்தியா கூறியுள்ளது.
சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க செல்லும்போது போதிய முன் ஏற்பாடுகள் செய்யப்படவில்லையா அல்லது விமான நிறுவனம் மெத்தனமாக நடந்து கொண்டுள்ளதா என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.