பாலம்பங்க்: 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து சீனியரான லியாண்டர் பயஸ் விலகியதால், டென்னிஸ் இரட்டையர் பிரிவில் யார் விளையாடு என்ற குழப்பத்துக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவுடன் இன்று துவங்குகிறது. விளையாட்டுப் போட்டிகள் நாளை முதல் நடக்க உள்ளன. இந்த நிலையில், தனக்கு சரியான ஜோடியைத் தரவில்லை என்று இரட்டையர் பிரிவில் இருந்து சீனியரான லியாண்டர் பயஸ் திடீரென விலகினார்.
இதனால், அவருக்குப் பதிலாக யாரை இரட்டையர் பிரிவில் இறக்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. நேற்று நடந்த பயிற்சிகளுக்குப் பிறகு, இந்திய டென்னிஸ் அணி இறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸ் பிரிவில் இந்தியா 5 பதக்கங்களை வென்றது. கலப்பு இரட்டையரில் தங்கம், ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலம், மகளிர் இரட்டையரில் வெண்கலம் கிடைத்தது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபன்னா மற்றும் திவிஜ் ஷரன் களமிறங்குவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. ஆடவர் ஒற்றையரில் ராம்குமார் ராமநாதன் மற்றும் பிரஜ்னேஷ் குனேஸ்வரன் களமிறங்குகின்றனர். பயஸ் விலகியதால் தற்போது ஆடவர் இரட்டையரில் ராம்குமார் ராமநாதன் மற்றும் சுமித் நாகல் களமிறங்க உள்ளனர்.
கர்ப்பமாக இருப்பதால் சானியா மிர்சா இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதனால் கலப்பு இரட்டையரிலும் சிக்கல் ஏற்பட்டது.
மகளிர் ஒற்றையரில் அங்கிதா ராய்னா, கர்மான் கவுர் தாண்டி களமிறங்குகின்றனர். கலப்பு இரட்டையரில் போபன்னாவுடன் இணைகிறார் அங்கிதா ராய்னா. திவிஜ் ஷரனுடன் கர்மான் கவுர் தாண்டி களமிறங்குகிறார்.
மகளிர் இரட்டையரில் பிரார்த்தனா தோம்பாரே, அங்கிதா ராய்னா களமிறங்குகின்றனர். ரிதுஜா போசலே மற்றும் பிரஞ்சாலா எட்லபள்ளியும் மகளிர் இரட்டையரில் விளையாடுகின்றனர்.