பாலம்பாங்க்: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட உள்ள டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், அணியுடன் இந்தோனேசியா வரவில்லை. அதே நேரத்தில் அவர் எங்கிருக்கிறார் என்பதும் அணியின் கேப்டன் மற்றும் கோச் ஜூஷான் அலிக்கே தெரியவில்லை.
18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பாங்கில் 18ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய டென்னிஸ் அணி பாலம்பாங்க்குக்கு இன்று சென்று சேர்ந்துள்ளது.
ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாட உள்ள, 45 வயதாகும் லியாண்டர் பயஸ் மட்டும் மிஸ்ஸிங். அவர் எங்கிருக்கிறார், எப்போது வருவார் என்பது குறித்து அணிக்கு எந்தத் தகவலும் இல்லை.
18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சூப்பர் சீனியரான பயஸ், இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 5 தங்கம் வென்றுள்ளார். கடைசியாக அவர் 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார். இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிதான், தனது கடைசி ஆசிய விளையாட்டுப் போட்டி என்று ஏற்கனவே அறிவித்திருந்தார் பயஸ்.
ஆனால், அவர் பாலம்பாங்க்குக்கு வந்து சேரவில்லை. இது குறித்து அணியின் கேப்டன் மற்றும் கோச்சான ஜூஷான் அலி கூறுகையில், பயஸ் எங்கிருக்கிறார், எப்போது வருகிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. கடைசியாக அவருடன் பேசியபோது, சின்சினாட்டி போட்டியில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து நேரடியாக வருவதாக கூறினார். ஆனால், சின்சினாட்டி போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை என்று கூறினார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபன்னாவும், திவிஜ் ஷரனும் இணைந்து விளையாட உள்ளனர். அதனால், அனுபவமில்லாத சுமித் நாகல் அல்லது ஒற்றையர் ஸ்பெஷலிஸ்டான ராம்குமார் ராமநாதனுடன் இணைந்து பயஸ் விளையாட வேண்டும்.