ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் போலந்து அணியிடம், இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ரோஹன் போபண்ணா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.
ரியோ ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரில் இன்று கோலாகலமாக துவங்கின. முதல் நாளான இன்று, ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவின் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் லியாண்டர் பயஸ்-போபண்ணா ஜோடி, போலந்தின் லூகாஸ் குபோட்- மார்சின் மாட்கோவ்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய குபோட், மார்சின் ஜோடி முதல் செட்டை 4-6 என கைப்பற்றியது. 2-வது செட்டில் தோற்றால் ஒலிம்பிக்கை விட்டு வெளியேற வேண்டும் என்பதால் இந்திய ஜோடி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதற்கு போலந்து ஜோடியும் சரியான வகையில் பதிலடி கொடுத்தது. இரு ஜோடியும் விட்டுக்கொடுக்காமல் ஆடியதால் ஆட்டம் விறுவிறுப்படைந்தது.
பயஸ் - ரோஹன் செய்த சில தவறுகள் காரணமாக புள்ளிகளை பெற்ற போலந்து அணி இரண்டாவது செட்டை 6-7 என கைப்பற்றி நேர் செட்களில் வெற்றி பெற்றது. 1 மணி நேரம் 24 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய ஜோடி 0-2 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ரியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறியது.
போட்டி தொடங்குவதற்கு முன்பே லியாண்டர் பயஸ், போபண்ணாவுடன் ஒரே அறையில் தங்க மறுத்ததாகவும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் சர்ச்சை கிளம்பியது. அதே நேரம் பயஸ் தாமதமாக ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்ததால் இருவரும் இணைந்து போதிய பயிற்சியும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதன் தாக்கமே போட்டியில் எதிரொலித்ததாகவும், இருவரும் விறுப்பு வெறுப்புகளை மறந்து ஒற்றுமையுடன் விளையாடி இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம் என்றும் டென்னிஸ் ரசிகர்கள் கருதுகின்றனர்.
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் போட்டிகளில் ஒன்றாக டென்னிஸ் கருதப்பட்டிருந்த நிலையில் இந்திய ஜோடி தோல்வி அடைந்துள்ளது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.