லைன் நடுவரை தாக்கிய விவகாரம்
யுஎஸ் ஓபன் 2020 தொடர் நியூயார்க்கில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் உலக நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் பங்கேற்று விளையாடிய நிலையில் 4வது சுற்றில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்பானிஷ் வீரர் காரேனோ பஸ்டாவிடம் முதல் செட்டில் தோற்ற நிலையில், பந்தை பின்பக்கமாக அழுத்தமாக அடித்ததில், அங்கிருந்த லைன் நடுவரின் தொண்டையை பந்து பதம்பார்த்தது.
மிகப்பெரிய பாடம்
இதையடுத்து தொடரிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார் ஜோகோவிச். இந்த சம்பவத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக ரோமில் உள்ள அவர், இந்த சம்பவம் தனக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுத் தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாழ்நாள் முழுவதும் மறக்காது
நடந்த சம்பவம் எதிர்பாராமல் நடைபெற்ற ஒன்று என்று தெரிவித்துள்ள ஜோகோவிச், ஆனால் அதை தன்னால் மறக்க முடியவில்லை என்றும் அதிலிருந்து வெளிவருவதற்காக உடலளவிலும் மனதளவிலும் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த பாதிப்பு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மனதிலிருந்து நீங்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
18வது கிராண்ட்ஸ்லாம் வாய்ப்பு இழப்பு
ஜோகோவிச் யுஎஸ் ஓபன் தொடரிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு 8 நாட்கள் கடந்துள்ளது. இதன்மூலம் 29 போட்டிகளை தொடர்ச்சியாக வெற்றி கொண்ட அவர் தொடர் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். மேலும் 18வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பையும் பறிகொடுத்தார். இந்நிலையில் தற்போது இத்தாலியன் ஓபன் 2020 டென்னிஸ் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளார். இந்த தொடர் கடந்த மே மாதத்தில் நடைபெறவிருந்த நிலையில் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.