மாட்ரிட் : மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஏற்கனவே ஒரு முறை தள்ளி வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த மாதம் முதல் கால்பந்து, கிரிக்கெட் என பல்வேறு விளையாட்டுக்கள் மீண்டும் நடக்கத் துவங்கி உள்ளன.
எனினும், சர்வதேச அளவிலான பெரிய டென்னிஸ் தொடர்கள் இதுவரை எதுவும் நடக்கவில்லை. அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொடரும் நடக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்த நிலையில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் இந்த ஆண்டு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மாட்ரிட் டென்னிஸ் தொடர் மே 1 முதல் மே 10 வரையிலான காலகட்டத்தில் நடைபெற இருந்தது. பின்னர் அந்தத் தொடர் செப்டம்பர் 12 முதல் 20 வரை நடத்தும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது.
19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து
இந்த நிலையில், போட்டி அமைப்பாளர்கள் மற்றும் மாட்ரிட் நகர சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் தொடர்வதால் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரை ரத்து செய்ய முடிவு செய்தனர்.
இந்த தொடர் ரத்து செய்யப்பட்டதன் மூலம் மகளிர் டென்னிஸ் அமைப்பின் சார்பில் வருடா வருடம் நடக்கும் கட்டாய டென்னிஸ் தொடர்கள் ஏதும் இந்த ஆண்டு நடைபெறாது.
முன்னதாக இந்தியன் வெல்ஸ், மியாமி ஓபன், சீனா ஓபன் ஆகிய கட்டாய தொடர்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.